இன்று உள்ளாட்சிக்கு மறைமுக தேர்தல் எந்த கட்சிக்கு அதிக பதவி கிடைக்கும்?
இன்று மறைமுக தேர்தல் எந்த கட்சிக்கு அதிக பதவி கிடைக்கும்?
சென்னை,: உள்ளாட்சி பிரதிநிதிகள் இடையே நடக்கும், மறைமுக தேர்தலை முறையாக நடத்த, கலெக்டர்களுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த தேர்தலில், தி.மு.க., – அ.தி.மு.க., இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.
தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், அதிக இடங்களை, தி.மு.க., பிடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனாலும், சுயேச்சைகள், அதிருப்தி வேட்பாளர்களின் ஆதரவில், தி.மு.க.,வை வீழ்த்த, அ.தி.மு.க., வலை விரித்துள்ளது.கடந்த மாதம், 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும், தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 515 மாவட்ட கவுன்சிலர்கள், 5,090 ஒன்றிய கவுன்சிலர்கள், 9,624 ஊராட்சி தலைவர்கள், 76 ஆயிரத்து, 746 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், 6ம் தேதி பதவி ஏற்றனர்.
இதையடுத்து, மாவட்ட கவுன்சிலர்கள் வாயிலாக, 27 மாவட்ட குழு தலைவர்கள், துணைத் தலைவர்கள்; ஒன்றிய கவுன்சிலர்கள் வாயிலாக, 314 ஒன்றிய குழு தலைவர்கள், 314 துணைத் தலைவர்கள்; ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் வாயிலாக, 9,624 ஊராட்சி துணைத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டி உள்ளது.
இதற்கான மறைமுக தேர்தல், 27 மாவட்டங்களில், இன்று நடக்கிறது.
மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி உறுப்பினர்கள், தங்களுக்குள் ஓட்டளித்து, இவர்களை தேர்வு செய்யவுள்ளனர். இத்தேர்தலை முறையாக நடத்த, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவுகளை பின்பற்றி, மறைமுக தேர்தலை, சட்டம் ஒழுங்கு பிரச்னையின்றி நடத்த, 27 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இப்பதவிகளை கைப்பற்றுவதற்கு, அ.தி.மு.க., – தி.மு.க., கூட்டணி இடையே, பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால், பல்வேறு இடங்களில் பிரச்னை எழுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, பாதுகாப்பு பணியில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்தல் நடப்பது இப்படி தான் ?மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இன்று நடக்கவுள்ளது. மாவட்ட கவுன்சிலர்கள் ஓட்டளித்து, இவர்களை தேர்வு செய்யவுள்ளனர்.இரண்டு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு, அதில், அதிக மாவட்ட கவுன்சிலர்களின் ஆதரவை பெறுபவர், வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இரண்டு பேரும் சமமான ஓட்டுக்களை பெற்றால், குலுக்கல் முறையில் வெற்றி பெற்றவர் தேர்வு செய்யப்படுவார்.
இதேபோல, ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல், சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடக்கும். ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல், சம்மந்தப்பட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடக்கும். இத்தேர்தலில், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சி தலைவர்கள் ஓட்டளிப்பர்.ஒரு பதவிக்கு, மூன்று பேர் போட்டியிடும் சூழல் ஏற்பட்டால், குலுக்கல் முறையில், ஒருவர் வெளியேற்றப்பட்டு, மற்ற இருவர் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவர்.