ஏழைமக்கள் அனைவருக்கும் உதவிதொகை கிடைப்பதை முதலமைச்சர் உறுதிசெய்ய வேண்டும்? அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்?
ஏழை மக்கள் அனைவருக்கும் உதவித்தொகை கிடைப்பதை பழனிசாமி அரசு உறுதி செய்ய வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
“கொரோனா பாதிப்பு உதவித்தொகைக்கான டோக்கன் அளித்த போதே ஆளுங்கட்சியினர் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் வழங்க முயற்சிப்பதாக செய்திகள் வெளியான நிலையில், இப்போது நேரடியாக வீடுகளுக்கே சென்று பணமாக வழங்கும்போது இதுபோன்ற அத்துமீறல்கள் இல்லாமல் தடுக்க பழனிசாமி அரசு முன்வர வேண்டுமென வலியுறுத்துகிறேன். நெருக்கடியான நேரத்தில் கூட ஆட்சியாளர்கள் மோசமான அரசியல் செய்யக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன்.
கொரோனா பெருந்தொற்று நோயைத் தடுப்பதற்கான ஊரடங்கினால் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் ஏழை, எளிய மக்களுக்காக அரசு சார்பில் வழங்கப்படும் ரூ.1,000/- உதவித்தொகைக்கான டோக்கனை தஞ்சாவூரில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் வழங்கிய போது அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சுற்றிவளைத்து பிடித்திருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. ஆளும் கட்சியினரின் இந்த செயல், கொரோனா அச்சத்தால் பெரும் இழப்புக்கு ஆளாகியிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு செய்யும் துரோகமாக அமைந்துவிடும். இதன் மூலம் ஆட்சியாளர்கள் அரசியல் ஆதாயம் தேட முனைவது சரியானதல்ல.
இந்நிலையில் உதவித்தொகை அவரவர் வீடுகளில் நேரடியாக பணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருப்பது ஆளுங்கட்சியினரின் அத்துமீறலை இன்னும் அதிகப்படுத்திவிடுமோ என்ற சந்தேகத்தை மக்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, ஆளுங்கட்சியினரின் தலையீடு இல்லாமல், அரசு ஊழியர்களை வைத்து தகுதியுள்ள ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் முறையாக உதவித்தொகையை வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
அதே நேரத்தில் உதவித்தொகை வழங்கச் செல்வோர் மூலமாக கொரோனா தொற்று பரவாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளச் சொல்ல வேண்டியது அவசியமாகும்.” இவ்வாறு அவரது அறிக்கையில் கூறியுள்ளார்