18 இந்தியர்களுடன் சரக்குக் கப்பல் கடத்தல்…
ஆப்பிரிக்க நாடான நைஜீரியக் கடல் பகுதியில் 18 இந்தியர்களுடன் சென்ற கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹாங்காங் நாட்டுக்குச் சொந்தமான கப்பல் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன் நைஜீரியக் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தது. இந்தக் கப்பலில் 18 இந்தியர்கள் உள்பட 19 பேர் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மேற்கூறப்பட்ட கப்பலை திடீரென மறித்த கடற் கொள்ளையர்கள் அதனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றனர்.
இந்தியர்கள் இருக்கும் கப்பல் கடத்தப்பட்ட விஷயத்தை சர்வதேச கடல் பாதுகாப்பு நிறுவனமான ஏ ஆர் எக்ஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
இந்திய தூதரக அதிகாரிகள், அந்த நாட்டு அரசை தொடர்பு கொண்டு கப்பலில் இருந்த இந்தியர்களை மீட்க உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில் கடத்தப்பட்ட கப்பலை நைஜீரிய கடற்படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.