இனி பாத்திரம் கழுவ தண்ணீர் வேண்டாம் – கோவையில் புதிய முயற்சி
கோடை காலங்களில் மட்டும் தான் முன்பெல்லாம் தண்ணீர் பிரச்னை இருந்தது. ஆனால் இப்போது வருடம் முழுவதும் தண்ணீருக்காக மக்கள் அலையும் அவலம் ஆங்காங்கே நடைபெற்று தான் வருகிறது. தண்ணீரை சேமிப்பதன் அவசியம் குறித்து பலரும் பேசி வருகின்றனர். இந்த சூழலில் தான் கோவையில் மரத்தூள் அல்லது மணல் பயன்படுத்தி பாத்திரங்களைச் சுத்தம் செய்து வருகின்றனர் மகா ஜெய்ன் சமாஜ் அமைப்பினர். திருமணம் போன்ற பெரிய நிகழ்வுகளில் சமையலுக்காக பயன்படுத்தப்படும் பாத்திரங்களைக் கழுவ அதிக தண்ணீர் செலவாகும். ஆனால் மரத்தூள் பயன்படுத்துவன் மூலம் 90% தண்ணீரை மிச்சம் பிடிக்க முடியும் என்றும் அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
மரத்தூளை பயன்படுத்தும் முறை!
முதலில் பாத்திரங்களில் ஒட்டி இருக்கும் உணவுகளின் மீதியை ஒரு துணியை கொண்டோ அல்லது ஸ்பான்ஞ் கொண்டோ நன்றாக துடைத்து விடுகின்றனர். அதன் பின் சிறிய பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் வைத்துக்கொண்டு துடைத்த பாத்திரத்தை லேசாக அலசி எடுத்துக் கொள்கின்றனர். அதன்பின் அந்த பாத்திரங்களை மணலின் மூலம் சுத்தம் செய்கின்றனர். இப்படி செய்வதால் பாத்திரங்கள் சுத்தம் ஆவதோடு கெமிக்கல் கலந்து எந்த பொருட்களையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்கின்றனர் மகா ஜெயின் சமாஜ் அமைப்பினர். ராஜஸ்தான் போன்ற வறட்சியான மாநிலங்களில் தண்ணீரை மிச்சப்படுத்த மரத்தூள் கொண்டு பாத்திரங்களை கழுவும் முறை நடைமுறையில் உள்ளதாகவும் , வீட்டிலும் கூட மரத்தூளை பயன்படுத்தி பாத்திரங்களை கழுவலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக பாத்திரங்களைக் கழுவ கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த சோப்பையோ, லிக்விடையோ தான் பயன்படுத்துகிறோம். ஆனால், அதை பயன்படுத்துவதன் மூலம் உடல்நலத்திற்கு தீங்கு என்கின்றனர் மருத்துவர்கள். உலகம் முழுவதும் கேன்சர் வேகமாக பரவி வருவதற்கு நாம் அன்றாட வாழ்கையில் பயன்படுத்தும் கெமிக்கல்களின் பயன்பாடு அதிகரித்ததே காரணம் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். ஆரோக்கியமான வாழ்கையை தேடி பலரும் பயணத்தை தொடங்கியுள்ளனர். இந்த மரத்தூள் மூலம் பாத்திரம் கழுவும் முறையும் ஆரோக்கியமான வாழ்கைக்கு வழி வகுக்கும். அதேபோல சில இடங்களில் மணல் கொண்டும் பாத்திரங்களை சுத்தம் செய்து வருகின்றனர். இதுபோன்ற செயல்கள் மக்களுக்கு தண்ணீரை சேமிப்பதன் அவசியத்தை உணர்த்தியுள்ளதாக தெரிகிறது.