பெரியார் ஆதரவாளர்கள் தொடர்பாக பாபாராம்தேவ் தெரிவித்துள்ள கருத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
பெரியார் ஆதரவாளர்கள் தொடர்பாக பாபா ராம்தேவ் தெரிவித்துள்ள கருத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 11ஆம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்திருந்த பதாஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ், பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆதரவாளர்கள் எல்லாம் அறிவுசார் பயங்கரவாதிகள் என விமர்சித்திருந்தார். இதற்கு அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆதரவாளர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைத்தளங்களில் பதாஞ்சலியை தடை செய்யுங்கள் எனவும், பாபா ராம்தேவை கைது செய்யுங்கள் எனவும் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்தனர்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், பெரியார் மீதும், எங்கள் சித்தாந்தம் மீதும் வலதுசாரி சக்திகள் குறிப்பிட்டு தாக்குதல் நடத்தியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். பெரியார் அடித்தட்டு மக்களுக்காக போராடினார். பெண்கள் உரிமைக்காக குரல் கொடுத்தார். சாதி அமைப்புகளுக்கு எதிரான பேசினார். இந்த அனைத்து அடக்குமுறை சக்திகளுக்கும் எதிரான திராவிட சித்தாந்தங்களை சார்ந்தே திமுக இருக்கும்என்று தெரிவித்துள்ளார்