நித்திக்கு முட்டுக்கொடுக்கும் எஸ்.வி.சேகர் ?ஆனந்த சண்டை ஆரம்பம்?
நித்திக்கு முட்டுக் கொடுக்கும் எஸ்.வி.சேகர்..! ஆனந்த சண்டை ஆரம்பம்.
நித்தியானந்தாவின் கைலாசா என்ற தனி நாடு, கானல் நீர் ஆன நிலையில், கைலாசா நாட்டிற்கு டிக்கெட் அனுப்பி வைத்தால் குடும்பத்துடன் சென்று வருவேன் என்று எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்து மதத்தின் பெயரை கெடுக்கும் வகையில் பிதற்றுவதை நித்தியானந்தா, நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மாணிக்கானந்தா எச்சரித்துள்ளார்.
பாலியல் வழக்கில் சிக்கியுள்ள கிராபிக்ஸ் சாமியார் நித்யானந்தாவை அகமதாபாத் மற்றும் கர்நாடக காவல்துறையினர் வலை வீசி தேடி வரும் நிலையில் தலைமறைவாக இருந்து கொண்டு நித்தி வீடியோ வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் நித்தியானந்தாவின் செல்வாக்கை தூக்கி நிறுத்த எஸ்.வி சேகர் மூலம் முட்டுக்கொடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து கடத்தல் புகார் அளித்த ஜனார்த்தன சர்மாவுக்கு எதிராகவும், நித்தியானந்தாவுக்கு ஆதரவாகவும் எஸ்.வி சேகர் வாய்ஸ் கொடுத்து 48 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் நித்தியானந்தா அளந்து விட்ட கதையை உண்மை என்று நம்பி கைலாசா என்ற நாடு அமைந்து விட்டதாக நம்பி கருத்து தெரிவித்துள்ளார் எஸ்.வி.சேகர்.
தான் காசு வாங்கிக் கொண்டு இதனை எல்லாம் தெரிவிக்கவில்லை என்றும் நித்தி டிக்கெட் கொடுத்து அழைத்தால் கைலாசாவுக்கு குடும்பத்துடன் சென்று வருவேன் என்றும் கூறிய எஸ்.வி.சேகர், ஆகில இந்திய சன்னியாசிகள் சங்கதலைவராக நித்தியானந்தா இருப்பதால் அவரை கைது செய்ய வாய்ப்பில்லை என்றும் கூறினார். அதே நேரத்தில் கைலாசாவில் ஓரினசேர்க்கை, முறையற்ற சரீர உறவு உள்ளிட்ட 11 விதமான பாலியல் செயல்பாடுகளுக்கு சட்ட பூர்வ அங்கீகாரம் அளித்திருப்பதாக நித்தி கூறியிருப்பதெல்லாம் தனக்கு தெரியாது என்று எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.
இதற்கிடையே நித்தியின் செயல்பாட்டிற்கும், கைலாசா என்ற பெயரை பயன் படுத்தியதற்கும் பெரிய பாளையத்தை சேர்ந்த மாணிக்கானந்தா சுவாமிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.