சென்னையில் சினிமா பாணியில்
ரூ.2,000 கள்ளநோட்டு மாற்றி தப்பமுயன்றவர் சிக்கினார்.
சென்னை அயனாவரத்தில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டை மாற்றிவிட்டு தப்பி ஓட முயன்ற நபரை கடைக்காரர் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தார். அவரிடம் இருந்து மேலும் 6 கள்ள நோட்டுகளை போலீசார் கைப்பற்றியதுடன், ஒருவரை தேடிவருகின்றனர்
சென்னை அயனாவரம் மார்க்கெட் தெருவில் உள்ள இனிப்பகத்தில் நேற்று இரவு ஒரு நபர் 200 ரூபாய்க்கு இனிப்பு வாங்கி விட்டு 2 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.
கடைக்காரர் அருணகிரி மீதிப்பணம் ஆயிரத்து 800 ரூபாய் கொடுத்ததும், அதைப்பெற்றுக்கொண்ட அவர், அருகில் உள்ள சந்து வழியாக ஓட ஆரம்பித்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த கடைக்காரர் அவர் கொடுத்த ரூபாய் நோட்டை ஆராய்ந்தபோது அது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. இதையடுத்து தப்பிய நபரை கடைக்காரர் பின்தொடர்ந்து சென்று ஆட்டோவில் ஏற முயன்றபோது மடக்கிப்பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
அயனாவரம் போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரித்ததில், அவர் ஓட்டேரியைச்சேர்ந்த எழுமலை என்று தெரியவந்தது. அவரிடம் இருந்து மேலும் ஆறு 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நோட்டுகளை சதீஷ் என்பவர் கொடுத்தாக ஏழுமலை தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.