ஆளுமை இல்லாத ரஜினி: சீண்டும் சீமான்
திருச்சி: கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும் பொழுது அரசியலுக்கு வராத ரஜினி ஆளுமை இல்லாதவர் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, ரஜினி அரசியலுக்கு வர இருப்பது ஏனோ ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. அதன் வெளிப்பாடாக அவ்வப்போது ரஜினியை கடுமையாக சாடி வந்தார்.
இதற்கிடையே சமீபத்தில் செய்தியாளர்களிடம் ரஜினி, தமிழகத்தில் ஆளுமைக்கான வெற்றிடம் இன்னமும் இருக்கிறது என கொளுத்தி போட்டாலும் போட்டார், இப்பிரச்னை இன்னமும் எரிந்து கொண்டிருக்கிறது.
அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் ஆகியோர் வெற்றிடத்தை முதல்வர் இபிஎஸ் நிரப்பிவிட்டார் எனவும், திமுக பொருளாளர் துரைமுருகன், வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார் எனவும் உடனடியாக மறுப்பு தெரிவித்தனர். இப்போது சீமானும், இப்பிரச்னையில் மூக்கை நுழைத்துள்ளார்.
திருச்சியில் சீமான் கூறியதாவது: கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும் பொழுது அரசியலுக்கு வராத ரஜினி ஆளுமை இல்லாதவர். தற்போது அவர்கள் இல்லாததால் அரசியலுக்குள் வரவேண்டும் என சொல்லுவது தான் ஆளுமையா. தனக்கு பாஜ காவி பூச முடியாது என்று சொன்ன ரஜினியால் அரை மணி நேரம் கூட தன் கருத்தில் உறுதியாக நிற்க முடியவில்லை. மீண்டும் அவரே அதை பூசி மெழுகினார். இவ்வாறு சீமான் கூறினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஒரு பாஜ நிர்வாகி, ‛‛ரஜினியின் அரசியல் வருகை, முதல்வர் கனவில் இருக்கும் பலருக்கும் துாக்கத்தை கெடுத்துள்ளது என்பதையே இது காட்டுகிறது” என்றார்.
.