ரூ.100 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல்.
தெலங்கானாவில் சிக்கிய கள்ளநோட்டு கும்பலிடம் இருந்து சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் கத்தை கத்தையாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
கம்மம் மாவட்டம் சத்திப்பள்ளி பகுதியை சேர்ந்த மாதர் என்பவன் தலைமையிலான கும்பல், 80 லட்சம் ரூபாய் கொடுத்தால், அதற்கு பதிலாக ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறி பலரிடம் மோசடி செய்துள்ளது.
ஒரு கோடி ரூபாய்க்கு உண்மையான ரூபாய் நோட்டுகளை தருவதாக கூறிவிட்டு, பணக்கட்டுகளுக்கு மேலேயும் கீழேயும் மட்டும் உண்மையான ரூபாய் நோட்டுகளை வைத்து இடையில் கள்ள நோட்டுகள் மற்றும் வெற்று காகிதங்களை வைத்து கொடுத்து மோசடி செய்துள்ளது. ஏமாற்றப்பட்டவர்கள் யாரும் காவல்துறையினரை நாடாத நிலையில் ஒருவர் மட்டும் புகார் செய்திருக்கிறார்.
அவரிடம் தகவல்களை பெற்ற அம்மாநில போலீசார் மாதர் என்பவனையும், அவனது கூட்டாளிகள் ஆறு பேரையும் கைது செய்தனர். விசாரணை நடத்திய பொழுது அவர்கள் கள்ளநோட்டுகளை அச்சடித்து புகழகத்தில் விட்டு வந்ததும் தெரிய வந்தது. கள்ளநோட்டுகளை அச்சடித்து வந்த வீட்டில் இருந்து 7 கோடி ரூபாய் அளவிற்கு கள்ளநோட்டுகள் முதலில் கைப்பற்றப்பட்டன.
கள்ளநோட்டுகளை அச்சடிக்க பயன்படுத்தப்படும் கணினி உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் மன்சூரு அடுத்த மர்லபாடு கிராமத்தில் வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கோடி ரூபாய் கள்ளநோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், பழைய 500 மற்றும் 1000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் இருந்தன.
கள்ளநோட்டு கும்பலுடன் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது ? எங்கெல்லம் கள்ள நோட்டுகள் புகழக்கத்தில் விடப்பட்ட என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.