கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது? கோவை போலீஸ் அதிரடி ?
கோவை,மேட்டுப்பாளையம் அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை பகுதியில் ஐந்திற்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், காரமடை பகுதியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து சிலர் தினசரி கஞ்சா பொட்டலங்கள் விற்று வருவதாக காரமடை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தகவலின் பேரில் காரமடை போலீசார், காரமடை முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒன்னிபாளையம் பிரிவு அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா பொட்டலம் விற்று வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், சத்தியமங்கலத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் ஆனந்த் (27) என்பவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில், கடந்த ஓராண்டிற்கும் மேலாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இவரது தந்தையும் சத்தியமங்கலம் பகுதியில் கஞ்சா விற்று வந்ததும், அவர் தற்போது சிறையில் இருப்பதாகவும் தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காரமடை காவல்துறையினர் ஆனந்த்தை கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.