குஷ்பு இட்லியும் கும்பகோணம் கடப்பாவும்???
சும்மா ஒரு ரைமிங்ஙாய் இருக்கட்டுமே என்று தலைப்பு கொடுத்துவிட்டாலும் செய்து முடிப்பது ஒரு சவாலாகத்தான் இருந்தது. ஒவ்வொரு திரைப்படமும் தன் முதல் முயற்சி போல என்பார்கள் அனுபவமிக்க மூத்த இயக்குநர்களும் நடிகர்களும். சமையற்கலையும் அப்படித்தான். கற்றுத் தேர்ந்துவிட்டேன் என காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ள முடியாது; காலை இடறிவிடும் சந்தர்ப்பங்கள் அநேகம். எனவேதான் தன்னடக்கத்துடன் அணுகுதல் சாலச் சிறந்தது என்னும் பொன்மொழியை ‘பஞ்ச்’ டையலாக்காகக் கொண்டு இன்றைய தயாரிப்பை நேர்காணுவோம்.
குஷ்பு என்றால் ‘நறுமணம்’ என்று பொருள். மற்றபடி நாம் இட்லி வகைக்கு அப்பெயரிடக் காரணம் வளமையும், மென்மையுமே. ஜவ்வரிசி என்னும் உப பொருள் சேர்வதால் இத்தகைய சிறப்புகள் கை கூடுகின்றன.
குஷ்பு இட்லிக்கு அதிக முயற்சி தேவையில்லை. 4:1:0.5 என்னும் விகிதத்தில் இட்லி அரிசி, உளுந்து மற்றும் ஜவ்வரிசையை மூன்று மணி நேரம் ஊறப்போட்டால் போதும். மாவை அரைத்து எட்டு மணி நேரம் நொதிக்கவைத்தால் வேதிவினை நிகழ்ந்து குஷ்பு இட்லி மாவு தயாராக இருப்பாள் உரிய மேக்கப்புடன்.
கும்ப. கடப்பா:
தஞ்சை மாவட்ட கும்பகோண அடையாளங்களில் ஒன்று கடப்பா. ஆந்திர கடப்பாவில் கிடைக்கும் கல் வகைக்கும் இதற்கும் ஸ்நானப் ப்ராப்தி கூட கிடையாது. குருமா, கொத்ஸு இவைகளிலிருந்து சற்றே விலகி தனிச்சுவையுடன் இலங்குவது. மீட்டெடுக்கப்பட்டு பரவலாக அறியப்பட்டு வரும் சிறப்புத் துணை உணவு – இட்லி மற்றும் பலவகை தோசைகளுக்கு.
தேவை:
ஒரு கப் பாசிப் பருப்பு
ஒரு உருளைக் கிழங்கு (விரும்புவோர்)
இரு சிறிய வெங்காயம்
இரு சிறிய தக்காளி
நான்கு பற்கள் பூண்டு
அரை கப் பட்டாணி
இரு கிராம்பு
பட்டை சிறிது
அரை மூடி தேங்காய்
சோம்பு இரண்டு ஸ்பூன்
பச்சை மிளகாய் ஆறு
எண்ணை தாளிக்க தேவையான அளவு
செய்முறை :
தேங்காய், பச்சை மிளகாய், சோம்பு மூன்றையும் மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்
உ.கி., பட்டாணி மற்றும் பாசிப்பருப்பை வேகவைக்கவும்
கடாயில் எண்ணை ஊற்றி தக்காளி, வெங்காயம், ஒரு கிராம்பு, பட்டை, பூண்டு போட்டு வதக்கி சிறிது நீர் விட்டு, அரைத்த தேங்காய், ப.மி.சோம்புக் கலவையை சேர்த்து உப்பிட்டு கலக்கி வேக விடவும். வெந்த பாசிப்பருப்பு, உ.கி. பட்டாணி போட்டு தேவையான அளவு நீர் சேர்த்து புரட்டிக்கொடுத்து, பத்து நிமிடங்கள் காத்திருக்கவும். கடப்பாவின் “குஷ்பு” கமழும். கொத்தமல்லி தழையைச் சேர்த்து அலங்கரித்து உண் மேசைக்கு அனுப்பவும்.
தேங்காய் சேர்க்கப்படும் உணவு தனிச்சுவையாக இருக்கும். அதன் இனிப்பு ஏனைய காரங்களை உறிஞ்சி தன்னையே முன்நிறுத்தும். எனவே அதி’காரம்’ விரும்புவோர் சற்றே காரச் சட்னியும் உடன் செய்துவைத்துக்கொள்வது நலம்.
என் வரையில் இன்றைய குஷ்பு இட்லியும் கும்பகோணம் கடப்பாவும் சிறப்பாக அமைந்தது. என்ன கொஞ்சம் அடர்த்தி அதிகம். ஆனாலும் முதல் முயற்சியில் ஜெயமே….!
??????????