கோவில்பட்டியில் லஞ்சஒழிப்பு விழிப்புணர்வு மனிதச்சங்கிலி
கோவில்பட்டியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு மனிதச்சங்கிலி
கோவில்பட்டியில் லஞ்ச ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மனிதச்சங்கிலி நடைபெற்றது.
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வார விழாவை முன்னிட்டு மக்களிடையே லஞ்ச ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு மற்றும் நேஷனல் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அணிகள் இணைந்து லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு மனிதச்சங்கிலி கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள பயணியர் விடுதி முன்பு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு தூத்துக்குடி மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமை வகித்தார். ஆய்வாளர் ஜெயஸ்ரீ, நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் சண்முகவேல், கல்லூரி முதல்வர் காளிதாசமுருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மனிதச்சங்கிலியில் பங்கேற்ற நாட்டு நலப் பணித் திட்ட மாணவர், மாணவிகள் லஞ்சம் ஒழிப்பு குறித்த பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி நின்றனர்.
தொடர்ந்து, லஞ்சம் வழங்க மாட்டோம், லஞ்சம் பெற மாட்டோம் என மனிதச்சங்கிலியில் பங்கேற்ற மாணவர், மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.