சசிகலாவுக்கு சொந்தமான பையனூர் பங்களா முடக்கம்: வருமான வரித்துறை நடவடிக்கை
பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் சசிகலாவுக்கு சொந்தமான, பையனூரில் அமைந்துள்ள தோட்ட வீடு வளாகத்தில் உள்ள 28.17 ஏக்கர் சொத்துக்கள் முடக்கப்படுவதாக, தோட்ட வீடு முகப்பில் வருமானவரித்துறை நோட்டீஸ் ஒட்டியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. இந்நிலையில், 2017-ம் ஆண்டு சசிகலா, ஜெயலலிதாவுக்கு சொந்தமான 157 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. சோதனையின் போது பினாமி சொத்துக்கள் என வகைப்படுத்தப்பட்ட சொத்துக்களை கைப்பற்ற வருமான வரித்துறை முடிவு செய்தது.
இந்நிலையில், வருமான வரித்துறையினரால் பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் சொத்துகள் முடக்கப்பட்டு வருகிறது. இதன்படி, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் பையனூர் கிராமத்தில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான பல்வேறு சர்வே எண்களில் உள்ள 28.17 ஏக்கர் சொத்துகள், பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் வருமான வரித்துறையினர் இன்று (செப். 08) முடக்கியுள்ளனர்.
மேலும், சொத்து முடக்கம் தொடர்பான அறிவிப்பு நோட்டீஸை 4 பேர் கொண்ட வருமான வரித்துறை குழுவினர், கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் பையனூர் பங்களா முகப்பில் சொத்துக்களின் விவரங்கள் மற்றும் சர்வே எண்களின் விவரங்கள் அடங்கிய 11 நோட்டீஸை ஒட்டினர்.
இதில், மறைந்த ஜெயலலிதாவின் ரத்த வாரிசுகளான தீபக் மற்றும் தீபாவுக்கும் மேற்கண்ட தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வருவாய்த்துறை சார்பில் தண்டோரா வாசித்து சொத்து முடக்கப்பட்டுள்ளதாக கிராமத்தில் அறிவித்தனர்.