திப்பு சுல்தான் பற்றிய பாடங்கள் பள்ளிபாடப் புத்தகத்தகங்களிலிருந்து நீக்கப்படும் எடியூரப்பா பேட்டி
பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து திப்பு சுல்தான் பற்றிய பாடங்கள் நீக்கப்படும் -எடியூரப்பா
பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து திப்பு சுல்தான் பற்றிய பாடங்கள் நீக்கப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
திப்பு சுல்தானை சுதந்திரப் போராட்ட வீரர் போல் சித்தரித்து தவறான வரலாற்றுத் தகவல்கள் பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ளதாக பாஜக எம்.எல்.ஏ.வான அப்பாச்சு ரஞ்சன் என்பவர் கல்வியமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
தமது ராஜ்ஜியத்தை விரிவாக்கம் செய்யவும் மக்களை மதம் மாற்றவும்தான் திப்புசுல்தான் குடகு, மங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு வந்ததாகவும், கன்னட மொழிக்கும் திப்பு சுல்தான் மரியாதை காட்டவில்லை என்றும், பாரசீக மொழியையே அவர் தமது ஆட்சி மொழியாக பயன்படுத்தியதாகவும் ரஞ்சன் அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
மடிகேரி என்ற பெயரை ஜாபராபாத் என்றும், மங்களூரை ஜலாலாபாத் என்றும் திப்புசுல்தான் பெயர் மாற்றியதாகவும், இந்துக் கோவில்கள் மற்றும் கிறித்துவ தேவாலய சொத்துகளை பறித்து சூறையாடியதாகவும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை மதம் மாற்றியதாகவும் தமது கடிதத்தில் தெரிவித்திருந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ., ஓட்டு அரசியலுக்காக திப்பு சுல்தானை பெரிய ஹீரோவாக்கி விட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதன் அடிப்படையில் 3 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு பாடநூல் நிறுவனத்திற்கு கல்வியமைச்சர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, பாடப்புத்தகங்களில் இருந்து திப்பு சுல்தான் தொடர்பான அனைத்து பாடங்களும் நீக்கப்படும் என்று அறிவித்துள்ளார். திப்பு சுல்தான் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்பதை ஏற்க முடியாது என்றும், திப்புஜெயந்தி நிகழ்ச்சி இனி ரத்து செய்யப்படும் என்றும் எடியூரப்பா கூறியுள்ளார்.