பூபேஷ் ஜி! இதோ உங்கள் செப்பல்.. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.. மறக்க முடியாத இந்திரா.
சென்னை: நாட்டின் முதல் பெண் பிரதமரான அன்னை இந்திரா காந்தியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
1984ம் ஆண்டு, அக்டோபர் 30-ம் நாள் இரவு.. இந்திராவுக்கு சரியாக தூக்கமே வரவில்லை.. கொஞ்சம் நேரம் காலாற நடந்தார்.. திரும்பவும் தூங்க போய்விட்டார்!
மறுநாள் காலை ஆபீசுக்கு கிளம்பிவிட்டார். என்னமோ இன்னைக்கு நடக்க போகிறது என்று மனதில் உதித்தது. ஆனால், அது அப்பவே நடக்கும் என்று அவருக்கு தெரியவில்லை. மொத்தம் 25 தோட்டாக்கள் அவரது உடலில் பாய்ந்ததாக சொல்லப்படுகிறது.
துப்பாக்கி சத்தம் கேட்டு சோனியா காந்தி வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடி வந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த இந்திராவை தன் மடியில் கிடத்தி கதறி அழுதார். கார் கொண்டுவருமாறு ஒரு காவலருக்கு சொல்லி, பிறகு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படுகிறார் இந்திரா.. அதுவரை ரத்தம் வடிந்து கொண்டே இருக்கிறது.. சோனியாவின் சேலையெல்லாம் ரத்தத்தில் நனைந்தன. நாட்டின் பிரதமர் இந்த நிலையில் கொண்டு வரப்படுவதை கண்டதும் டாக்டர்களே அலறிவிட்டனர். அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தும் உயிர் பிரிந்தது!
கூட்டு சேரா அமைப்பு
இந்திரா காந்தி – உலக தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் – 100 நாடுகளை கொண்ட கூட்டு சேரா அமைப்பின் தலைவராக பதவி வகித்தவர்.. இந்தியாவின் சக்தி வாய்ந்த பிரதமராக 3 முறை இருந்த இந்திரா காந்தியை இரும்பு மனுஷி என்கிறார்கள்.. ஆனால் பாசம் என்று வந்துவிட்டால், இந்த இரும்புகூட உருகி… மருகி. ஆறாக ஓடும் என்பதற்கு இந்திராவும் விலக்கல்ல!
ஹக்சர்
அதற்கு எத்தனையோ உதாரணங்கள் இருந்தாலும் இரண்டை மட்டுமே இங்கு சொல்லாம். இந்திரா காந்திக்கு முதன்மை செயலாளராக இருந்தவர் ஹக்சர்… படு புத்திசாலி.. உண்மையை படார் படார் என்று சொல்லி விடுவார்.. நேருக்கு நேராக சொல்லுகிறோமே, என்ன நினைப்பார்களோ என்றெல்லாம் கரிசனம் பார்க்க மாட்டார்.. அந்த அளவுக்கு துணிச்சல் படைத்தவர். நிர்வாகத்தில் இவர் எடுத்த சரியான பல முடிவுகளுக்கு காரணம் இவரது துணிச்சல்தான். இவர் இந்திராவின் நண்பரும்கூட!
கடிதம்
1971-ம் ஆண்டு காலகட்டம் அது.. இந்திராவுக்கு திடீரென தன் ஆயுளை பற்றி சந்தேகம் சந்தேகம் வந்துவிட்டது போல. அதனால் ஹக்ஸருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் ஓரிரு வரிகள்: “எனக்கு மூட நம்பிக்கை கிடையாது என்று உங்களுக்கு தெரியும். ஆனாலும், கொஞ்ச நாளாகவே எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன ஆகும் என்கிற எண்ணம் அலைக்கழித்து கொண்டே இருக்கிறது.
மருமகள்கள்
குழந்தைகளை பற்றி நிறைய கவலைப்படுகிறேன். அவர்களுக்கு விட்டுச்செல்ல என்னிடம் எதுவும் இல்லை.. சில பங்குகளை தவிர எதுவும் என்னிடம் இல்லை. கொஞ்சம் நகை இருக்கிறது. அதை எதிர்கால மருமகள்களுக்கும் பிரித்து வைத்திருக்கிறேன். வீட்டு சாமான்கள் படங்கள் சில உள்ளன.. கார்பெட்டுகள் உள்ளன… எல்லாமே சமமாக பிரிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
இதயம் வலிக்கிறது
ஒரு விஷயம். ராஜீவுக்கு வேலை இருக்கிறது. ஆனால் சஞ்சய் வேலை இல்லாதவன். நான் அவனது வயதில் இருந்ததை போலவே முரட்டுத்தனத்தில் இருக்கிறான் – அவன் எவ்வளவு கஷ்டப்படப் போகிறானோ என்று நினைத்தாலே என் இதயம் வலிக்கிறது. ஒரு பிரச்சினை என்றால், எங்கு வசிப்பார்கள், எப்படி என்றுதான் தெரியவில்லை. ஆனால் பிள்ளைகள் இந்த உலகில் தனியாக இல்லை என்று உணர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்..” என்று ஒரு தாயின் தவிப்புடன் அந்த கடிதம் நீள்கிறது.
துக்கம்
மற்றொரு சம்பவம்: மகன் சஞ்சய்காந்தி விமான விபத்தில் பலியானபோது மிகவும் அதிர்ந்து போய் இருந்தார் இந்திரா. அந்த துக்கத்தை தாங்க முடியாமல் தவித்தார். தன்னிடம் ஆறுதல் கூற வருபவர்கள் முன்பு, ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டால்கூட அவர்கள் மனம் பாதிக்கப்படும் எனறு முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டார்.
பூபேஷ் குப்தா
இந்திராவை பார்த்து ஆறுதல் கூற, மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பூபேஷ் குப்தா வருகிறார். பூபேஷ் குப்தா லண்டனில் இந்திராவுடனும், அவரது கணவர் பெரோஸ் காந்தியுடனும் படித்தவர். பூபேஷ் குப்தாவை பார்த்ததும் இந்திரா உடைந்துவிட்டார். அதுவரை திடமாக இருந்தவர் தேம்பி தேம்பி அழ துவங்கிவிட்டார். அவரை ஆறுதல் படுத்திய பூபேஷ், சற்று நேரத்தில் விடை பெற்று சென்றுவிட்டார்.
பூபேஷ் ஜி!
அவர் போனபிறகு பார்த்தால், மறந்துபோய் பூபேஷ் தனது செருப்புகளை விட்டுவிட்டு போயிருக்கிறார். அடுத்த வினாடியே அந்த செருப்புகளை தன் கைகளால் எடுத்து கொண்டு வெளியே ஓடுகிறார் இந்திரா. பூபேஷ் ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் வந்திருந்தார். “பூபேஷ் ஜி! இதோ உங்கள் செப்பல்!” என்று ரிக்ஷாவில் ஏறிக் கொண்டிருந்தவரிடம் தருகிறார் இந்திரா. பூபேஷ் குப்தா ஒரு கனம் திகைத்து போகிறார். இப்போது அவரது கண்களிலிருந்தும் கண்ணீர்!
எத்தனை பேரிடம் தென்படும் இந்த மாண்பு?! சங்கு சுட்டாலும் வெண்மையே தரும்!