விண்மீன் விரைவு செய்திகள்.
பிஎஸ்என்எல் – எம்டிஎன்எல் நிறுவனங்களை இணைக்க ஒப்புதல்.
புதுடில்லி: பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை ஒன்றாக இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி உரிமம் வழங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், கடனில் இயங்கிவரும், எம்டிஎன்எல்( மகாநகர் தொலைபேசி நிகாம் லிமிடெட்) மற்றும் பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்)நிறுவனங்களை, பலப்படுத்தும் வகையில், இரண்டையும் ஒன்றாக இணைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. முன்னதாக, இரண்டு நிறுவனங்களையும் இணைக்க, பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகார குழு ஒப்புதல் அளித்திருந்தது. இதனை தொடர்ந்து, தற்போது மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியுள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், எம்டிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல் பங்குகளை மத்திய அரசு விற்கவில்லை. இரண்டு நிறுவனங்களையம் மூடவில்லை. பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் ஒரு போதும் தனியார் மயமாக்கப்பட மாட்டாது. பிஎன்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஒன்றாக இணைக்கப்பட்டு, அதன் மறுசீரமைப்புக்காக 14 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். பிஎஸ்என்எல்க்கு 4ஜி சேவை ஒதுக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள், விருப்ப ஓய்வு பெற விரும்பினால், அவர்களுக்கு, சிறப்பு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.39,937 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.