ரஜினி பார்த்ததும் உற்சாகமடைந்த சசிகலாபுஷ்பா, நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இமயமலைக்கு சென்றிருந்த ரஜினிகாந்த் நேற்று இரவு டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் சென்னை திரும்பினார். நேற்று இரவு 11.30 மணிக்கு சென்னை வந்தடைந்த அதே விமானத்தில் பயணித்திருக்கிறார் அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா. விமானத்தில் ரஜினிகாந்த் அமர்ந்திருப்பதை பார்த்ததும், உற்சாகம் அடைந்த சசிகலா புஷ்பா, ரஜினியிடம் சென்று ”அண்ணா வணக்கம், நான்தான் சசிகலா புஷ்பா” என அறிமுகப்படுத்திக்கொண்டார்
சசிகலா புஷ்பா’ என்ற பெயரை கேட்டதும் சட்டென எழுந்த ரஜினிகாந்த், ”வணக்கம்… வணக்கம்… ரொம்ப சந்தோஷம்” என சொல்லியிருக்கிறார். ”அண்ணா நீங்க உட்காருங்கள்” என சசிகலா புஷ்பா சொல்ல, ”பரவாயில்லம்மா… நீங்க எப்படி இருக்கீங்க…” என்று நலம் விசாரித்த ரஜினியிடம், ”தமிழக அரசியலில் தலைவர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு நல்ல தலைவரை தமிழகம் தேடுகிறது. ஒரு நல்ல தலைவர்தான் தமிழகத்தில் நல்ல முதலமைச்சராக இருக்க முடியும். அந்த வகையில் ஒரு நல்ல தலைவராக உங்களைத்தான் தமிழக மக்கள் பார்க்கிறார்கள். தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து எனக்கு கிடைக்கக்கூடிய தகவல்கள் ‘ரஜினி அரசியலுக்கு வருவாரா?’ என்பதுதான். அந்த கேள்வியே உங்களைத்தான் நல்ல தலைவராக மக்கள் நினைப்பதாக எனக்கு தோன்றுகிறது. அதனால் நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும். ஒரு நல்ல மாற்றத்தை நீங்கள் ஏற்படுத்த வேண்டும்” என வலியுறுத்தியிருக்கிறார் சசிகலா புஷ்பா.
சசிகலா புஷ்பாவின் அந்த வார்த்தைகளை கேட்டு, ”மிக்க மகிழ்ச்சி…” என்று சொல்லியிருக்கிறார் ரஜினிகாந்த். ரஜினியுடன் பேசியதில் உற்சாகமாக இருக்கிறார் சசிகலா புஷ்பா.