மாவட்டஆட்சியர் நகராட்சி ஆணையருக்கு மிரட்டல்? திட்டஆய்வாளர் அறிவுடைநம்பிகைது
நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையருக்கு சமூக வலைத்தளங்களில் மிரட்டல் விடுத்த நகர திட்ட ஆய்வாளர் அறிவுடைநம்பி கைது செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் நகர்ப்புற திட்ட ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் அறிவுடைநம்பி. இந்த நிலையில், கடந்த 30ம் தேதி நீலகிரியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடத்திற்கு நகராட்சி ஆணையாளர் உத்தரவு படி சீல் வைக்கப்பட்டது. ஆனால் அறிவுடைநம்பி கையூட்டுப் பெற்றுக்கொண்டு சீல் வைத்த கட்டிடத்தைத் திறக்க அனுமதி வழங்கினார். இதனால் நகராட்சி ஆணையாளர் நாராயணன் நகர்ப்புற திட்ட ஆய்வாளர் அறிவுடைநம்பியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நகர்ப்புற திட்ட ஆய்வாளர் அறிவுடைநம்பி மது போதையில் சமூக வலைத்தளங்களில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் நகராட்சி பொறுப்பு ஆணையாளர் நாராயணசாமி ஆகிய இருவரையும் மிரட்டும் வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் நகராட்சி ஆணையாளர் என்னை எதுவும் செய்ய முடியாது எனவும் நான் மீண்டும் புதன்கிழமை அன்று பணியில் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆணையாளருக்கு எதிராக பணியாற்ற இருப்பதாக சர்ச்சைக் கருத்தை வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, கூடலூர் நகராட்சி பொறுப்பு ஆணையாளர் நாராயணன், ஊட்டி ஜி1 காவல் நிலையத்தில் அறிவுடைய நம்பி மீது புகார் அளித்தார். இதையடுத்து காவல் ஆய்வாளர் விநாயகம், அறிவுடை நம்பியை நேற்று இரவு கைது செய்தார். பின்னர் மாஜிஸ்ட்ரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.