மலேசியப்பொருட்கள் இறக்குமதியை குறைத்து கொள்ள முடிவு காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டதால்
விண்மீன் விரைவு செய்திகள்.
மலேசியப் பொருட்கள் இறக்குமதியை குறைத்துக் கொள்ள முடிவு?
மலேசியப் பொருட்கள் இறக்குமதியை குறைத்துக் கொள்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமையல் எண்ணெய் இறக்குமதியில் முதல் இடத்தில் உள்ள நாடு இந்தியா. சமையல் எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் இரண்டு பங்கை வகிக்கும் பாமாயிலுக்காக மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளையே இந்தியா அதிகம் சார்ந்துள்ளது.
அந்த இரு நாடுகளிடம் இருந்து ஆண்டுக்கு சராசரியாக 90 லட்சம் டன், பாமாயிலை இந்தியா இறக்குமதி செய்கிறது. அதிகபட்சமாக இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் மலேசியாவிடம் இருந்து 39 லட்சம் டன் பாமாயிலை வாங்கியுள்ளது இந்தியா. இந்த நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் மலேசியா எடுத்த நிலைப்பாட்டால், இந்தியாவுடனான அந்நாட்டின் வர்த்தக உறவில் பூசல் ஏற்படும் சூழல் உண்டாகியுள்ளது.
கடந்த மாதம் நடந்த ஐ.நா. அவை கூட்டத்தில் பேசிய மலேசிய பிரதமர் மகாதீர் முகமது, காஷ்மீருக்குள் இந்தியா ஊடுருவி இருப்பதாகவும் ஆக்கிரமித்து இருப்பதாகவும், கூறி இருந்தார். அவரது பேச்சால், மத்திய அரசு அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே தான், மலேசியா நாட்டுப் பொருட்கள் இறக்குமதியைக் குறைத்துக் கொள்வதென, வர்த்தக அமைச்சகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலேசியாவுக்குப் பதில் இந்தோனேசியாவிடம் இருந்து பாமாயில் இறக்குமதியை அதிகப்படுத்துவது எனவும், அர்ஜெண்டினாவிடம் இருந்து சோயா எண்ணெய்யையும், உக்ரைனிடம் இருந்து சூரிய காந்தி எண்ணெய்யையும் அதிகம் இறக்குமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.