கோவில்பட்டியில் காதல் கணவரை சேர்த்துவைக்க கோரி கோட்டாட்சியரிடம் இளம்பெண் மனு
காதல் கணவரை சேர்த்து வைக்க கோரி கோட்டாட்சியரிடம் மனு அளித்த இளம்பெண்.
கோவில்பட்டி அருகே சுந்தரலிங்கபுரத்தை சேர்ந்த இளம்பெண் தனது காதல் கணவருடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் கண்ணீருடன் மனு வழங்கினார்.
கோவில்பட்டி அருகே சுந்தரலிங்கபுரத்தை சேர்ந்த மாரியப்பன் மகள் உமாமகேஷ்வரி, பகத்சிங் மன்ற மாவட்ட தலைவர் உத்தண்டுராமன், விவசாய சங்க நிர்வாகி ரத்னவேலு ஆகியோர் தலைமையில் தனது உறவினர்களுடன் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் கோட்டாட்சியர் ஜே.விஜயாவிடம் தனது காதல் கணவரை சேர்த்து வைக்க கோரி கண்ணீர் விட்டு அழுதார். அவர் வழங்கிய மனுவில், நான் லேப் டெக்னீசியன் படித்து வருகிறேன். எனது ஊருக்கு அடுத்து உள்ள விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் சிவனைந்தபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜாமூர்த்தி என்பவர் நான் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் போது பழக்கமானார். இவர் சங்கரன்கோவில் விவசாயத்துறையில் பணியாற்றி வருகிறார். எங்களது பழக்கம் காதலாக மாறியது. எனக்கு கடந்த 23.9.2019 அன்று 18 வயது பூர்த்தியடைந்ததை தொடர்ந்து, நாங்கள் சங்கரன்கோவிலில் உள்ள பெருமாள் கோயிலில் திருமணம் செய்து கொண்டோம்.
ஒரு மாதத்தில் எனது வீட்டில் உள்ளவர்களிடம் பேசி உன்னை அழைத்து செல்கிறேன் என ராஜாமூர்த்தி கூறினார். இதனால் நான் எனது வீட்டில் இருந்தேன். கடந்த 4-ம் தேதி நான், எனது தாய் கற்பகம்மாள், மருமகள் முத்துலட்சுமி ஆகியோர் வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த ராஜாமூர்த்தியின் சித்தி எங்களை கடுமையாக பேசி மிரட்டிவிட்டு சென்றார். நேற்று முன்தினம் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் ராஜாமூர்த்தி மற்றும் அவரது சித்தியை அழைத்து சென்று விட்டார்.
இதுகுறித்து நான் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தேன். அங்கு எனது புகார் மனு வாங்கவில்லை. எனவே, எனது கணவர் ராஜாமூர்த்தியை கண்டுபிடித்து என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும். எனது கணவரையும் மறைத்து வைத்துக்கொண்டு எனக்கும், எனது குடும்பத்துக்கும் மிரட்டல் விடுக்கும் அவரது சித்தி, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.
மனுவை பெற்றுக்கொண்ட அவர், மகளிர் காவல் நிலைய ஆய்வாளரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதன் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.