இந்திய பார்லிமென்டில் புகை குண்டு வீசப்பட்ட விவகாரம்? சதியில் ஈடுபட்டது ஆறு பேர்!
புதுடில்லி : பார்லிமென்டில் புகை குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் அங்கிருந்த நால்வர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஆறு பேர் இந்த சதியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
பார்லி.,யின் லோக்சபாவில் குளிர்கால கூட்டத்தொடரை பார்வையிட வந்த இருவர், திடீரென எம்.பி.,க்கள் இருந்த பகுதியில் புகுந்து புகை குண்டுகளை வீசினர்.அதேசமயம், பார்லி., வளாகத்தின் வெளியேயும் இருவர் ரகளையில் ஈடுபட்டனர். இவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் ஆறு பேருக்கு தொடர்பிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பார்லி.,யின் உள்ளே ரகளையில் ஈடுபட்டவர்களில் ஒருவர் உத்தர பிரதேசத்தின் லக்னோவைச் சேர்ந்த சாகர் சர்மா என்றும் மற்றொருவர் கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த மனோரஞ்சன் என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது-.
பார்லி., வெளியே புகை குண்டுகளை வீசி முழக்கங்களை எழுப்பியது, ஹரியானாவின் ஹிசாரைச் சேர்ந்த நீலம் தேவி மற்றும் மஹாராஷ்டிராவின் லத்துாரைச் சேர்ந்த அமோல் ஷிண்டே என்பதும் தெரியவந்துள்ளது.இந்த விவகாரத்தில் மேலும் இருவருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குருகிராமைச் சேர்ந்த லலித் ஜா உள்ளிட்ட ஐந்து பேரும், அப்பகுதியில் உள்ள விஷால் என்பவரின் வீட்டில் தங்கியிருந்து சதி திட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து பெற்ற தகவலின் அடிப்படையில் விஷாலை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய லலித் ஜாவை அவர்கள் தேடி வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:கடந்த நான்கு ஆண்டுகளாக சமூக வலைதளங்கள் வாயிலாக நண்பர்களான ஆறு பேரும், அரசுக்கு எதிராக பார்லி.,யில் கலவரத்தை ஏற்படுத்த முடிவு செய்துள்ளனர்.இதற்காக பல மாதங்களாக திட்டம் வகுத்த அவர்கள், உளவு பார்க்கும்
பணியிலும் ஈடுபட்டு உள்ளனர். அனைவருமே பார்லி.,யின் உள்ளே பார்வையாளராக நுழைய முயற்சித்த நிலையில், இருவருக்கு மட்டுமே அனுமதி கிடைத்து உள்ளது.
விவசாயிகள் போராட்டம், மணிப்பூர் கலவரம், வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் அரசுக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தவே இந்த செயலில் அவர்கள் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் எந்த அமைப்பையும் சேர்ந்தவர்கள் இல்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொடர் விசாரணையில், பார்லி.,யின் வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நீலம் தேவி, ஆசிரியர் என்பதும், சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு அவர் தயாராகி வந்ததும் தகவல் வெளியாகியுள்ளது.இவர் ஏற்கனவே, புதுடில்லியில் நடந்த விவசாயிகள் மற்றும் மல்யுத்த வீராங்கனையருக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.