சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இந்தாண்டு தீபாவளிக்கு பட்டாசு உற்பத்தி 98 சதவீதம் வரை விற்பனையானதால் ரூ.6 ஆயிரம் கோடிக்கும் மேல் வர்த்தகம் நடந்துள்ளது. உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சிவகாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 1070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இத்தொழிலில் 3 லட்சம் பேர் நேரடியாகவும், 8 லட்சம் பேர் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர். 2022 தீபாவளிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு, மூலப்பொருள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 70 சதவீதம் மட்டுமே பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டது.
அதேநேரம் பட்டாசு 30 முதல் 40 சதவீதம் வரை விலை உயர்ந்தது. அந்தாண்டு தீபாவளிக்கு உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து பட்டாசுகளும் விற்பனையாகியதால் ரூ. 6 ஆயிரம் கோடி வர்த்தகம் நடந்தது. இந்நிலையில் இந்தாண்டு தீபாவளிக்கும் அதே உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தவில்லை, சரவெடி தயாரிக்கவில்லை. ஆனாலும் கடந்தாண்டை விட உற்பத்தி சதவீதம் அதிகரித்தது.
இந்தாண்டு ரூ. 6000 கோடிக்கும் மேல் வர்த்தகம் நடந்துள்ளது.
பட்டாசு ஆலை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ”இந்தாண்டு பட்டாசு விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. ஆனாலும் உற்பத்தி அதிகரித்து 98 சதவீதம் வரை வியாபாரம் நடந்தது,” என்றார்.