இந்தியாவுக்கு சூரத் , பாரத் ,என்ன பெயர் வேண்டுமானாலும் வையுங்கள்.. எனது நாடு தமிழ்நாடு: சீமான் குபீர்
சென்னை: ”இந்தியாவுக்கு பாரத், சூரத் என என்ன பெயர் வேண்டுமானாலும் வையுங்கள், எங்களுக்கு கவலையில்லை. உங்கள் நாட்டிற்கு நீங்கள் பெயர் வைப்பதில் நான் தலையிட முடியாது, என் நாடு தமிழ்நாடு” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னை போரூரில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: பா.ஜ., அரசு எதையுமே முன்னறிவிப்பு செய்து அறிவிப்பது இல்லை. அப்படிதான் இந்தியா என்ற பெயர் மாற்றுவதாக வரும் செய்தியும். இந்தியாவின் பெயரை நீங்கள் ‘பாரத்’னு வையுங்கள், ‘சூரத்’னு வையுங்கள், பிரச்னையில்லை.
உங்கள் நாட்டிற்கு நீங்கள் பெயர் வைக்கிறீர்கள் நான் தலையிட முடியாது; இது என் நாடு தமிழ்நாடு. எனவே, உங்கள் நாட்டிற்கு என்ன வேண்டுமானாலும் பெயர் வையுங்கள்.
ஆங்கிலேயர்கள் இந்தியா என வைத்ததால் பெயர் மாற்றுகிறீர்கள் எனில், ஆங்கிலேயர் வில்லியம் ஜோன்ஸ் ‘ஹிந்து’ மதம் பற்றி கையெழுத்து போட்டதால் அந்த பெயரையும் மாற்றிவிடுங்கள். பெயரை மாற்றினால் நாட்டின் 180 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துவிடுவார்களா? ஆட்சிக்கு வந்தபோதே பெயரை மாற்றி இருக்க வேண்டியது தானே?
தேர்தல் வரவுள்ளதால் சிலிண்டர் விலை குறைகிறது, சட்டங்களின் பெயர் மாறுகிறது, சந்திரயான்-3, ஆதித்யா எல்1 ஏவப்படுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே தேர்வு, ஒரே வரி என்றால் ஒரே நீர் எங்கே? காவிரி நீரை ஏன் எங்களுக்கு பெற்றுத்தர முடியவில்லை? இப்படி இருந்தால் எனக்கு எப்படி நாட்டுப்பற்று வரும்? இவ்வாறு அவர் கூறினார்.