”தென்காசி தனியார் நீர்வீழ்ச்சிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லாதீர்!” – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
தென்காசி மாவட்டத்தில் தனியார் நீர்வீழ்ச்சிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல
வேண்டாம், அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் பட்சத்தில் மாவட்ட
நிர்வாகம் பொறுப்பேற்காது என மாவட்ட ஆட்சியர் துரை.ரவிசந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கடனாநதி மற்றும் ராமநதி அணையின் பாசன வசதி வாயிலாக, 9,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகிறது.
தற்போது கார் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வரும் நிலையில் கடனா மற்றும்
ராமநதி அணையில் இருந்து பாசனத்திற்கு தேவையான தண்ணீரை மாவட்ட ஆட்சியர்
துரை.ரவிசந்திரன் திறந்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் துரை.ரவிசந்திரன் பேசியதாவது:
விவசாயிகள் கார் சாகுபடி மேற்கொள்ள இன்று முதல் 105 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். குண்டாறு அணைக்கு மேற்பகுதியில் உள்ள கண்ணுப்புளி மெட்டு பகுதியில் உள்ள தனியார் நீர் வீழ்ச்சிகளுக்கு சுற்றுலா பயணிகள் அபாயகரமான பயணம் மேற்கொள்ள வேண்டாம்.
இதுவரை விதியை மீறி இயக்கப்பட்ட 5 ஜீப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் மாவட்டத்தில் உள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவியில்
மட்டும் சுற்றுலா பயணிகள் குளித்து செல்ல வேண்டும். தனியார் நீர்
வீழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டாம்.
அவ்வாறு தனியார் வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணிகள் செல்லும் பட்சத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும்பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் பொறுப்பேற்காது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.