நடைப்பயிற்சியில் கீழே தவறி விழுந்த தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி,தலை, முழங்காலில் காயம் , தனது சொந்த ஊரில் தங்கி, சிகிச்சை
தமிழக காங்., தலைவர் அழகிரி, நேற்று நடைபயிற்சி மேற்கொண்ட போது, கீழே விழுந்து தலை, முழங்காலில்காயம் ஏற்பட்டதால், சொந்த ஊரில் தங்கி, சிகிச்சை பெற்று வருகிறார்.
கடலுார் மாவட்டம்,புவனகிரி அருகில் உள்ள கீரப்பாளையம் திருப்பணிநத்தம் கிராமம், அழகிரியின் சொந்த ஊர். இங்கு அவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
சென்னை நந்தனம் அரசு வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பிலும் அவருக்கு வீடு உள்ளது. சென்னையில் இருக்கும் போது அங்கு அவர் தங்குவார்.
சிதம்பரத்தில் அழகிரி குடும்பத்தினர் நடத்தி வரும் கல்லுாரியின் மைதானத்தில், நேற்று காலையில் அவர் நடைபயிற்சி மேற்கொண்டார்.அப்போது, அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.
நிலைதடுமாறி கீழே விழுந்த அவரது மூக்கு கண்ணாடி உடைந்து, அதில் உள்ள கண்ணாடி துகள், முகத்தில் காயத்தை ஏற்படுத்தியது. முழங்கால் மீதும் காயம் ஏற்பட்டு, ரத்தம் அதிகமாக கசிந்தது.
அழகிரி கீழே விழுந்ததை கண்ட விவசாய பணியில் ஈடுபட்ட பெண், முதல் உதவி செய்துள்ளார்.
இருப்பினும் ரத்தம் நிற்காமல் அதிகமாக வெளியேறியதால், உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் காலுக்கு, ‘சிடி’ ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.
மூட்டு ஜவ்வில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், ஓரிரு நாட்கள் நடக்காமல் ஓய்வு எடுக்க வேண்டும் என, டாக்டர்கள் அறிவுறுத்தினர். சிகிச்சை முடித்த பின், அவர் வீடு திரும்பினார்.