வெக்கை எண்பதுகளில் எழுத்தாளர் பூமணியால் கரிசல் வாழ்வின்.. நிலத்தின்.. மக்களின் மனதில் புழுங்கும் வெக்கையை எழுத்துக்களில் ஏற்றி வைத்த ஒரு வரலாற்றுப் பதிவு.
பத்துக்கும் குறைவான மிகச் சொற்பமான பாத்திரங்களை வைத்து பதின்ம வயது சிறுவனின் ஒரு பயணத்தையும் அந்த பயணத்தில் அவன் மனதோடு நிகழும் உரையாடலின் வாயிலாக அரசு.. அதிகாரம்.. காவல் நிலையம்.. சட்டம்.. நீதிமன்றம்.. அங்கு வழங்கப்படும் நீதி என எல்லாவற்றையும் குறித்து நமக்குள் ஒரு உரையாடலைத் துவக்கி வைக்கிறார் பூமணி.
பதின்ம வயது சிறுவன் செய்யும் ஒரு கொலையில் இருந்து துவங்குகிறது கதை. கொலை செய்த அந்த சிறுவனும் அவனது தந்தையும் ஏழு நாட்கள் ஓடை, கம்மாய், மலங்காடு, கரும்பு தோட்டம், சுடுகாடு, உறவுகளின் வீடு, அய்யனார் கோவில் எனச் சுற்றி வந்து எட்டாவது நாள் நீதிமன்றத்தில் சரணடைவதற்கு பேருந்தில் ஏறுவதோடு முடிகிறது கதை.
அந்த 7 நாட்கள் வெயிலையும் நிழலையும் போல கரிசல் நிலத்தின் வாழ்க்கையையும் வலியையும் சேறும் சகதியுமாக அப்படியே படி எடுத்து வைத்திருக்கிறார் பூமணி.
நிலம் எங்கள் உரிமை என்ற மண்ணின் பூர்வகுடி மக்களின் குரலை 40 ஆண்டுகளுக்கு முன்பே உரக்கப் பேசிய நாவல் தான் வெக்கை. பேசியதோடு மட்டுமல்லாமல் அந்த உரிமைக்காக உயிரைக் கொடுக்கவும், எடுக்கவும் எப்போதும் அந்த மக்கள் தயங்கியதில்லை. ஆனால், ஒருபோதும் இறுதி வரை உரிமையை விட்டுக் கொடுத்து வீழ்வதில்லை என்பதை உறுதியோடு எடுத்துக் கூறுகிறது வெக்கை.
நூல் :- வெக்கை
ஆசிரியர் :- பூமணி
வெளியீடு :- காலச்சுவடு (தமிழ் கிளாசிக் நாவல்)
விலை :- ₹ 125/-
( பின்குறிப்பு :- நீங்கள் எதிர்பார்த்த அசுரன் பற்றி இங்கே எதுவுமே குறிப்பிடாததற்கு காரணம் கொலை செய்த ஒரு சிறுவன் தன் தந்தையோடு பயணிக்கிறான் என்பதைத் தாண்டி நாவலுக்கும் படத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. வெக்கையின் தாக்கத்தால் எடுக்கப்பட்ட படமே தவிர, வெக்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் அல்ல அசுரன்.)