குழந்தை போல ஆட்டம் போடும் குட்டியானை ஈரோடுமக்கள் ஆச்சரியம் மகிழ்ச்சி
விண்மீன்நியூஸ் நேரலை …..
குழந்தையைப் போல ஆட்டம் போடும் குட்டி யானை!’ – ஆச்சரியத்தில் ஈரோடு மக்கள்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனச்சரகத்தில் இருக்கிறது கானக்குந்தூர் வனப்பகுதி. இந்த வனப்பகுதியிலிருந்த குட்டி யானை ஒன்று, கடந்த செப் 27-ம் தேதி, அருகிலுள்ள ‘முருகர் கரடு’ என்னும் பகுதியிலுள்ள பட்டா நிலத்துக்குள் புகுந்துவிட்டது. தாயிடமிருந்து காணாமல் போன குழந்தை போல, அங்குமிங்கும் அலைந்து திரிந்த அந்தக் குட்டி யானை குறித்து வனத்துறையினருக்குப் பொதுமக்கள் தகவல் கொடுத்திருக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், குட்டி யானையை அழைத்துச்சென்று காட்டினுள் விட்டிருக்கின்றனர். அடுத்த இரண்டு நாள்களிலேயே அந்தக் குட்டி யானை, திம்பம் வனப்பகுதியிலுள்ள சாலைகளில் தடுமாற்றத்துடன் அலைந்திருக்கிறது.
அந்தக் குட்டி யானையை மீட்ட வனத்துறையினர், கராச்சிக்கொரை பகுதியில் உள்ள சத்தியமங்கலம் வனக் கால்நடை மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்.
உடலின் பல இடங்களில் காயத்தோடு இருந்த அந்தக் குட்டி யானைக்கு மருந்து போட்டு, பால் கொடுத்து, கால்நடை மருத்துவர் அசோகன் தலைமையிலான குழுவினர் பராமரித்து வருகின்றனர். ஒரு வயதே இருக்கும் அந்த குட்டிப் பெண் யானைக்கு, ‘அம்முக்குட்டி’ எனவும் பெயரிட்டிருக்கின்றனர்.
புட்டிகளில் கொடுக்கும் பாலை குழந்தை போல குடிப்பதில் தொடங்கி, டாக்டர் அசோகன் செல்லும் இடங்களுக்கெல்லாம் குழந்தையைப் போல காலைச் சுற்றிச்சுற்றி ஓடிவருகிறது. காட்டில் கம்பீரமாகக் கடந்துசெல்லும் யானைகளையே பார்த்துப் பழகிய பொதுமக்கள், இந்த அம்முக்குட்டியை ஆச்சர்யத்துடன் வந்து பார்த்துச் செல்கின்றனர்.
சத்தியமங்கலம் வனக் கால்நடை மருத்துவமனையின் மருத்துவர் அசோகனிடம் பேசினோம். “தாய் யானையைப் பிரிந்த இந்தக் குட்டி யானை, மனிதர்களின் சத்தத்தைக் கேட்டு கிராமத்தினுள் நுழைந்திருக்கிறது. எங்ககிட்ட இந்த யானையை ஒப்படைக்கும் போது உடலில் காயத்தோடும், உடம்பில் தெம்பு இல்லாமலும் இருந்தது.
காயத்துக்கு மருந்து போட்டு, அதுக்கு பால் கொடுத்து பராமரிச்சிக்கிட்டு இருக்கோம். யானைங்க பசும்பால் எல்லாம் குடிக்காது. குழந்தைங்களுக்குக் கொடுக்கக்கூடிய ‘லேக்டோஜென்’ பால் பவுடரை வாங்கி கலக்கிக் கொடுக்கிறோம்.
குறைந்தபட்சம் தினமும் 15 லிட்டர் பால் கொடுக்கணும். பசிச்சா குழந்தைங்க மாதிரி அலறும். ஒவ்வொரு தடவையும் ஒரு லிட்டருக்குக் குறையாம கொடுக்கணும். யார் அரவணைக்கிறாங்களோ அவங்ககூட யானை அட்டாச் ஆகிடும். அந்த வகையில், நான் அதுகூடப் பழகிட்டதால, நான் எங்க போனாலும் அது என்கூடவே வருது.
குட்டி யானை பராமரிக்கும் மருத்துவர் அசோகன்
அம்முக்குட்டின்னு பேர் சொல்லிக் கூப்பிட்டா, லேசா தலையாட்டும். ஒரு குழந்தை மாதிரி எங்களோட கொஞ்சி விளையாடுது. மாலை நேரங்களில் கொஞ்ச நேரம் வாக்கிங் கூட்டிட்டு போறோம். காட்டைப் பிரிந்து மனிதர்களிடம் பழகிய இந்த யானையை மறுபடியும் காட்டினுள் விடுவது சரியாக இருக்காது. இதை வண்டலூர் உயிரியல் பூங்காவிலோ அல்லது முதுமலையிலோ வைத்துக் கண்காணிப்பது தான் சரியாக இருக்கும்” என்றார்.