கோவில்பட்டியில் புதுபஸ்நிலையம் முன்பு அரசுவிரைவு, ஆம்னி பஸ்கள் பயணிகளை ஏற்றி, இறக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் நடவடிக்கை ✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
கோவில்பட்டி:
கோவில்பட்டி கூடுதல் பஸ்நிலையம் முன்பு அரசு விரைவு பஸ்களும், ஆம்னி பஸ்களும் பயணிகளை ஏற்றி, இறக்கிச் ெசல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
கூடுதல் பஸ்நிலையம்
கோவில்பட்டி நகரில் போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு கடந்த 2007ம் ஆண்டு நாற்கர சாலை அருகில் கூடுதல் பஸ் நிலையம் திறக்கப்பட்டது. ஆனால் கடந்த 14 ஆண்டுகளாக முழுமை யாக கூடுதல் பஸ் நிலையம் செயல்படவில்லை. இதனால் அனைத்து பஸ்களும் கூடுதல் பஸ் நிலையத்திற்குள் செல்லாமல் சர்வீஸ் சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் நிகழ்ந்துவருகிறது.
இதனால், கூடுதல் பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் செல்ல வேண்டும், தேசிய நெஞ்சாலையில் பயணிகள் ஏற்றி, இறக்க கூடாது என்று பொதுமக்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
கலெக்டர் ஆய்வு
இதையெடுத்து கூடுதல் பஸ்நிலையத்திற்குள் பஸ்கள் சென்று வர கலெக்டர் செந்தில்ராஜ் நடவடிக்கை மேற் கொண்டார். ஆனாலும், அரசு விரைவு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் உள்ளே வராமல் நாற்கர சாலையில் பயணிகளை ஏற்றி, இறக்கி வந்தன.
இந்நிலையில் நேற்று கலெக்டர் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம், சர்வீஸ் சாலை, தேசிய நெடுஞ்சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அனைத்து அரசு விரைவு மற்றும் ஆம்னி பஸ்கள் கூடுதல் பஸ் நிலையம் முன்பு வந்து பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது உதவி கலெக்டர் மகாலெட்சுமி, தாசில்தார் சுசீலா, வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் ஆகியோர் உடனிருந்தனர்.
கண்காணிப்பு குழு
பின்னர் கலெக்டர் கூறுகையில், அரசு விரைவு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் கூடுதல் பஸ் நிலையம் முன்பு பயனிகளை ஏற்றி, இறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனை நடைமுறைப்படுத்தவும், கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மேம்பால பகுதியில் எதிரே வரும் வாகனங்கள் தெரியும் வகையில் கண்ணாடிகள் அமைக்கப்படும். தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் மற்றும் அண்ணா பஸ் நிலையத்திற்கு இடையே அரை மணி நேரத்திற்கு ஒரு முறை அரசு சர்வீஸ் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் 5 மாதத்திற்கு தற்காலிக தினசரி சந்தை செயல்படும்’ என்றார்.