கமலின் தேவர் மகனைப் பின்னுக்குத் தள்ளிய இயக்குனர் வெற்றிமாறனின்
அசுரன்
தலித் பிரச்சினைகளை முற்போக்கான சக்திகள் (பெரியாரிஸ்டுகள்- கம்யூனிஸ்டுகள் ) துணை கொண்டு தலித்துகளே தீர்க்கப் போராடுவதே சரியான வழிமுறையாகும் என்கிற யதார்த்தம் கொண்டு திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும்
திரைப்படமே
தனுஷின்
அசுரன்.
அசுரன்.
ஒரு சமூக அக்கறை கொண்ட எழுத்தாளரின் படைப்பைக் கையில் எடுத்து, அதில், சமூகத்தின் தீராத அவலமாக இருக்கும் சாதியக் கொடுமைகளை கையில் எடுத்து, அதை வெகுஜன மக்களுக்குப் பிடிக்கும் வகையில், திரைக்கதையில் தொய்வு ஏற்படாமல், எடுத்தாண்ட விஷயத்தை நாசூக்காக வெளிப்படுத்துவது என்பது ஒரு பெரும் கலை. அதை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.
அரசியல் சாசனத்தில் பிரிவு 15ல் தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டாலும், இன்றும் பல்வேறு வடிவங்களில் இந்தியா முழுக்க அது புதிய உத்வேகத்தோடு இருந்து கொண்டு தான் உள்ளது. இந்த சாதியக் கொடுமைக்கு ஆளாகுபவர்கள் தலித்துகளே. தலித்துகள் மீதான இந்தக் கொடுமைகள், எழுத்தில் தலித் எழுத்தாளர்களாலும், பிற எழுத்தாளர்களாலும், பதிவு செய்யப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால், திரையில் இது குறித்தப் பதிவுகள் குறைவு.
சரியான கதை, முதலீடு, பிரபல ஹீரோக்கள் இத்தகைய கதைகளில் நடிக்க சம்மதிப்பது என்று இதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அத்தகைய சிக்கல்களையெல்லாம் மீறி, தமிழில் பரியேறும் பெருமாள் போன்ற மிகச் சிறப்பான படைப்புகள் வரத் தொடங்கியிருப்பது ஒரு ஆரோக்கியமான வளர்ச்சி. அந்த வரிசையில் வெளிவந்திருக்கும் ஒரு சிறந்த படைப்பு தான் “அசுரன்”.
நெல்லை மாவட்டத்தில் பள்ளர்கள் சந்தித்து வரும் ஒடுக்குமுறைகளை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த கடுமையான தீண்டாமை, எண்பதுகளில் வேறு வடிவத்தில் தலித்துகளை எப்படி ஒடுக்குகிறது. ஆதிக்க சாதியினரின் மனதில் அகலாமல் இருக்கும் வன்மம், இடதுசாரி அரசியல், மக்கள் போராட்டம், பஞ்சமி நில அரசியல், தலித்துகளின் எளிய வாழ்க்கை முறை
என்று பல்வேறு விஷயங்களை கையாளும் அசுரன், அவை உறுத்தாத வகையில், கதையோடு ஒன்றி, போகிற போக்கில் நம் மனசாட்சியை உலுக்கும் வகையில் எடுத்தாளப்பட்டுள்ளது.
தலித்துகள் மீதான கொடுமைகள் குறித்த செய்திகளை, அது நம்மைப் பற்றியதில்லை என்று, அலட்சியமாகக் கடந்து செல்லும் வழக்கம் உள்ள ஒரே ஒருவரை, அந்த செய்தியை படிக்கும் வகையில் மாற்றினாலே, வெற்றிமாறன் பெறும் வெற்றி பெற்றுள்ளார். ஒரு படைப்பாளியாக அவரின் சமூக அக்கறை மேலும் வளர வேண்டும். மேலும் பல சிறந்த படைப்புகளை வெற்றிமாறன் சமூகத்துக்கு வழங்க வேண்டும்.
இத்தகைய ஒரு கதைக்களத்தில், ஒரு 45 வயது நபராக, நரைத்த தலையோடு, கறை படிந்த பற்களோடு, கல்யாண வயதில் உள்ள இளைஞனுக்கு தந்தையாக நடிக்க சம்மதித்ததே, தனுஷை, சமகால ஹீரோக்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. அவரின் நடிப்புத் திறனை சொல்ல வேண்டியதில்லை.
படத்தின் இதர சிறப்பம்சங்களை ரசிக்கத் திரையரங்கிற்கு சென்று காணுங்கள்.