இருசக்கர வாகனத்தை நடுரோட்டில் எரித்த இளைஞர்,தூத்துக்குடியில் திகில்காட்சி
குடும்பத்தகராறு காரணமாக மதுபோதையில் நடுரோட்டில், தனது இருசக்கர வாகனத்தை எரித்த இளைஞரால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் தாமோதரநகர் அருகில் உள்ள வண்ணார் 3-வது தெருவை சேர்ந்தவர் செந்தூர்பாண்டி. இவரது மகன் வேலுமயில். பிளமிங் வேலை பார்க்கும் இவர், நேற்று மதியம் தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக மது அருந்தியுள்ளார்.
இதைத்தொடர்ந்து தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த அவர், தூத்துக்குடி தாமோதரநகர் பீங்கான் ஆபீஸ் சந்திப்பு அருகில் நடுரோட்டில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, தீவைத்து வண்டியை கொழுத்திவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். நடுரோட்டில் இருசக்கர வாகனம் மளமளவென்று தீ பற்றி எரிந்ததை தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தென்பாகம் போலீசார், எரிந்த இருசக்கர வாகனத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தி காவல்நிலையம் கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.