நண்பன் மூலம் கணவனை ஆற்றில் தள்ளி கொலை செய்த மனைவி செல்வி
(கணவருடன் செல்வி)
தினசரி குடித்து விட்டு தன்னை அடித்து துன்புறுத்திய கணவனை, நண்பன் மூலம் காவிரி ஆற்றில் தள்ளிவிட்டு கொலை செய்த மனைவி போலீசில் சரண் அடைந்தார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஏரி தெரு பகுதியை சேர்ந்தவர் செல்வி. இவருக்கும் வெங்கடேசன் என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இதனிடையே வெங்கடேசன் குடிபோதைக்கு அடிமையானதால் தினசரி குடித்து விட்டு தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.
இந்த நேரத்தில் தன்னுடன் விசைத்தறி தொழிலில் பணிபுரிந்து வந்த குமாரபாளையம் காவேரி நகர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவருக்கும் செல்விக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது. அப்போது தனது கணவன் தினசரி குடித்து விட்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாக செல்வி பெருமாளிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்ட பெருமாள், வெங்கடேஷிற்கு கடந்த 8-ஆம் தேதி இரவு அளவுக்கதிகமான மது வாங்கிக் கொடுத்து அவர் குடிபோதையில் இருந்தபோது, காவேரி நகர் பகுதியில் உள்ள காவிரி ஆற்று பாலத்தின் மீது இருந்து ஆற்றில் தள்ளி விட்டு கொலை செய்ததாக தெரிகிறது.
(பெருமாள்)
இது குறித்து தகவல் எதுவும் வெளியே பரவாத நிலையில், இந்த விஷயம் வெளியே தெரியாமல் இருக்க செல்வியை கட்டாயப்படுத்தி அவருடன் பலமுறை தகாத உறவில் ஈடுபட்டுள்ளார் வெங்கடேஷ். இதனால் மனமுடைந்த செல்வி காவல் நிலையத்தில் சரணடைந்து, தனது கணவனை தான் கேட்டுக்கொண்டதால் பெருமாள் மூலம் காவிரி ஆற்றில் தள்ளி கொலை செய்ததாக ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்தார்.
இந்த அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பெருமாளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் பெருமாள் வெங்கடேஷை காவிரி ஆற்றில் தள்ளி விட்டதாக கூறப்படும் பகுதியில் வெங்கடேசன் சடலம் உள்ளதா எனவும் போலீசார் தேடிவருகின்றனர்.