கோவில்பட்டிக்கு புதிய டி.எஸ்.பியை விரைந்து நியமிக்க வேண்டியும், போக்குவரத்து காவல் ஆய்வாளர் நியமிக்க வேண்டியும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் கே.பி.ராஜகோபால் கோரிக்கை✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்
கோவில்பட்டிக்கு புதிய டி.எஸ்.பியை விரைந்து நியமனம் செய்ய வேண்டும் – த.மா.கா கோரிக்கை
கோவில்பட்டிக்கு புதிய டி.எஸ்.பியை விரைந்து நியமிக்க வேண்டும், போக்குவரத்து காவல் ஆய்வாளர் நியமிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் கே.பி.ராஜகோபால் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு கே.பி.ராஜகோபால் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி இரண்டாவது பெரிய நகரமாக உள்ளது. இங்கே தீப்பெட்டி தொழிற்சாலை, நூற்பாலைகள், பொறியியல், பாலிடெக்னிக், அரசு மற்றும் தனியார் கலைக் கல்லூரிகள், பள்ளிகள் இயங்கி வருகின்றன. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நான்கு வழி சாலையில் அமைந்துள்ள கோவில்பட்டி காவல் சரகத்தில் கோவில்பட்டி மேற்கு. கிழக்கு, அனைத்து மகளிர் காவல் நிலையம், கொப்பம்பட்டி, கயத்தாறு கழுகுமலை, நாலாட்டின்புதூர் ஆகிய காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
கோவில்பட்டி காவல் சரகத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபம், வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம், கழுகுமலை மலைப்பகுதியில் உள்ள சமணர் சிற்பங்கள் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற பகுதிகள் உள்ளன.
இந்நிலையில் கோவில்பட்டி சரகத்தில் துணைக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த உயர்திரு உதயசூரியன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன்பின்னர் இங்கு காவல் துணை கண்காணிப்பாளர் பணியிடம் காலியாகவே வைக்கப்பட்டுள்ளது. மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் கூடுதலாக கோவில்பட்டி சரகத்தையும் கவனித்து வருகிறார்.
கடந்த 11ஆம் தேதி கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் இந்த விழாவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வந்து வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். இதில் துணைக் காவல் கண்காணிப்பாளரின் பணி மிகவும் முக்கியமானது. ஆனால் இந்த முறை துணைக் காவல் கண்காணிப்பாளர் இல்லாமல் பொறுப்பு அதிகாரியைக் கொண்டே விழாவுக்கான பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்து முடித்து விட்டார். சில குளறுபடிகள் ஆங்காங்கே காணப்பட்ட போதிலும் விழா அமைதியாக முடிவடைந்தது அனைவருக்கும் மகிழ்ச்சியை தருகிறது. ஆனாலும் துணக்காவல் கண்காணிப்பாளர் பணியிடம் உரிய நேரத்தில் நிரப்பப்பட்டிருந்தால், களத்தில் உள்ள தட்பவெட்ப நிலை அறிந்து அதற்கு ஏற்ப பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள வசதியாக இருந்திருக்கும். மேலும் சட்டன் மேல் நடவடிக்கைகள் எடுப்பதற்கு காவல் ஆய்வாளர்கள் பொறுப்பு அதிகாரியை நாட வேண்டியது இருப்பதால் வழக்குகளிலும் விசாரணைகளிலும் தேக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிகிறோம்.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி சித்திரை பெருந்திருவிழாவில் சொற்ப அளவிலான போலீசாரை கொண்டு துணை காவல் கண்காணிப்பாளர் உதயசூரியன் பாதுகாப்பு பணிகளை நேர்த்தியாக செய்திருந்தார். இது தளத்தில் அவர் நேரடியாக ஆய்வு செய்து எடுத்த முடிவுகளுக்கு ஆகச் சிறந்த உதாரணம். எனவே தென் மாவட்டங்களில் மிகவும் முக்கிய ஊராக கருதப்படும் கோவில்பட்டியில் துணைக் காவல் கண்காணிப்பாளர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும். அதேபோல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிடம் நீண்ட நெடுங்காலமாக நிரப்பப்படாமலேயே தட்டிக் கழிக்கப்பட்டு வருகிறது. அதையும் நிரப்பி போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.