சென்னை, ஆவடியில் ஏலச்சீட்டு பணத்தை கேட்டதால் ஆத்திரம் ,பெண்ணுக்கு கத்தியால் வெட்டு✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்
ஏலச்சீட்டு பணத்தை கேட்டதால் ஆத்திரம் பெண்ணுக்கு கத்தியால் வெட்டு
ஆவடி: ஆவடி அடுத்த மோரை திருமலை நகரை சேர்ந்தவர் விஜயகுமார்(43). இவர் இன்டீரியர் டெக்கரேட்டர் பணி செய்து வருகிறார். இவரது மனைவி கல்பனா(38). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மதியம் கல்பனா மளிகை கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வீராபுரம் பகுதியைச் சேர்ந்த வியாபாரி முருகன்(48) என்பவர் கல்பனாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கல்பனாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், அவர் சத்தம் போட்டு அலறி துடித்துள்ளார். இதனை பார்த்த முருகன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். இதில், படுகாயமடைந்த கல்பனாவை அவருடைய உறவினர்கள் மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது சம்பந்தமாக, கல்பனா ஆவடி டேங்க் பேக்டரி போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஆவடி மோரை பகுதியைச் சேர்ந்தவர் லில்லி(37). இவர் ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். இவரிடம் நான் ரூ.5 லட்சம் ஏலம் சீட்டிற்கு பணம் கட்டி வந்தேன். இந்த சீட்டை, சமீபத்தில் எடுத்தேன். லில்லி ரூ.3.30 லட்சம் கொடுத்தார். மீதி பணத்தை விரைவில் தருவதாக கூறினார். ஆனால், பலமுறை அவரை தொடர்பு கொண்டு கேட்டும் மீதி பணத்தை கொடுக்கவில்லை, இவ்வாறு கூறியுள்ளார். இதனையடுத்து, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து லில்லி, முருகனை தேடுகின்றனர்.