? winmeennews.com?
ஒரு எலியை பிடிக்க 22 ஆயிரம் செலவு; 3 ஆண்டுகளில் ரூ. 5.89 கோடி செலவில் 2,636 எலிகள் பிடிக்கப்பட்டன : பதறவைக்கும் ரயில்வே ரிப்போர்ட்
OCT 11, 2019
சென்னை : ரயிலில் இருக்கும் ஒரு எலியை பிடிக்க சென்னை ரயில்வே நிர்வாகம் ரூ. 22 ஆயிரம் செலவு செய்துள்ளது. ரயில்களில் எலித் தொல்லை இருப்பது உண்மைதான். அதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எலி, பூச்சிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சரிவர மேற்கொள்ளாத ஒப்பந்ததாரர்களுக்கு அவ்வப்போது அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தென்னிந்திய ரயில்வேயின் சென்னை மண்டலங்களில் சரக்கு ரயில்களின் சேவை அதிகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சரக்கு ரயில்களில் உள்ள பொருட்களை எலிகள் நாசம் செய்வதால் அதிகமான இழப்பு ஏற்பட்டு வந்தததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜூலை 17-ம் தேதி ஆர்டிஐ சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்துள்ள பதில் அறிக்கையில் சென்னை மண்டல ரயில்வே சில வருடங்களாகவே எலித் தொல்லையால் மிகவும் சிரமப்பட்டு வந்ததாகவும், அவை பல சேதங்களை செய்து வந்ததுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் அதிகாரிகளும் எலிகளை ஒழிக்க பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். மே மாதம் 2016 முதல் நடப்பாண்டு ஏப்ரல் வரை எலிகள் அச்சுறுத்தலை சமாளிக்க எவ்வளவு செலவானது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டது.
கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 5.89 கோடி செலவிடப்பட்டுள்ளதாக பதில் கிடைத்துள்ளது. இதில் 2018 முதல் 2019ல் மட்டும் 2,636 எலிகள் பிடிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பதில் அளித்துள்ளது. சென்னை செண்ட்ரல் ரயில், எழும்பூர், செங்கல்பட்டு, தாம்பரம் , ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் 1,715 எலிகள் பிடிக்கப்பட்டுள்ளன. மேலும் 921 எலிகளை ரயில்வே பயிற்சி மையத்தில் பிடிக்கப்பட்டுள்ளது. தோராயமாக ஒரு எலியை பிடிக்க ரூ.22,334 செலவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.