இந்தியாவில் பாராசிட்டமால் மாத்திரைகளை தர மறுக்கின்றனவா இந்தியமருந்துக்கடைகள்✍️காரணம் என்ன?✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
பாராசிட்டமால் மாத்திரைகளை தர மறுக்கின்றனவா மருந்துக்கடைகள்; காரணம் என்ன?*
கோவிட்-19 மூன்றாம் அலையில் இந்தியர்களுக்குப் பிடித்த சிற்றுண்டி பாராசிட்டமால் மாத்திரைகள்தான் எனும் அளவுக்கு சமீபமாக பாராசிட்டமால் மாத்திரைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. லேசான கோவிட் தொற்றுக்கு பாராசிட்டமால் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம் என்று அரசின் வழிகாட்டு நெறிமுறைகளிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாராசிட்டமால் மாத்திரைகளின் விற்பனை 3-ம் அலையின் தொடக்கத்திலிருந்து அதிகரித்துள்ளது.
கோவிட்-19 தொற்றின் பொதுவான அறிகுறிகளில் காய்ச்சல் ஒன்றாக இருப்பதாலும், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு காய்ச்சல், உடல்வலி ஏற்படுவதாலும், இதுதவிர வேறு வகை வைரஸ் காய்ச்சல்கள் குளிர்காலத்தில் பரவுவதாலும் இந்த மாத்திரையின் விற்பனை மும்மடங்காக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு மருந்துக்கடைகளி்ல் பாராசிட்டமால் மாத்திரைகள் தற்போது கொடுக்கப்பதில்லை. மருத்துவர் பரிந்துரைச்சீட்டு இருந்தால்தான் மாத்திரை வழங்கப்படும் என்று மருந்துக் கடைகளில் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. பாராசிட்டமால் மாத்திரை மருத்துவர் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் வாங்கக்கூடிய Over the counter (OTC) மருந்து வகையில்தான் வருகிறது. இந்நிலையில் இந்த மாத்திரைகள் ஏன் வழங்கப்படுவதில்லை என்ற கேள்வி எழுகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் செயலாளர் கே.கே.செல்வனிடம் பேசினோம்.
“பாராசிட்டமால் மற்றும் கோவிட் ரேபிட் ஆன்டிஜென் கிட் ஆகியவற்றை மருந்துக் கடைகளில் விற்பனை செய்தால் அதனை வாங்கியவர்களின் பெயர், மொபைல் எண் ஆகிய விவரங்களைச் சேகரிக்கும்படி அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த விவரங்களைச் சேகரித்து மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் குழுக்களில் அதனைப் பதிவிடுகிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்… செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆனால் பாராசிட்டமால் மாத்திரைகளை யார் கேட்டாலும் அவர்களுக்கு விற்பனை செய்கிறோம். மருத்துவர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் இதனை உட்கொள்ள வேண்டாம் என்று ஆலோசனையும் அளிக்கிறோம். கிராமப்புறங்கள் மற்றும் நகரத்தில் சில பெட்டிக்கடைகளில் பாராசிட்டமால் மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனைக் கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி சிவபாலன் கூறுகையில், “பாராசிட்டமால் மற்றும் ரேபிட் ஆன்டிஜென் கிட் வாங்குபவர்கள் பற்றிய தகவல்களைச் சேகரிக்கச் சொன்னது கொரோனா நோயாளிகளைக் கண்டறிவதற்காக எடுக்கப்பட்ட முன்னெடுப்பு. இது அரசாங்கத்துக்கு உதவி செய்யக்கூடிய வகையில் இருக்கிறது. அவசர காலத்தில், தேவைப்பட்டால் மக்கள் தங்களின் உரிய விவரங்களை மருந்து விற்பனையாளர்களிடம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.
ஆனால் இந்த மாத்திரை கிடைக்காது என்பதெல்லாம் இல்லை. அதை வழங்கக்கூடாது என்று மருந்துக்கடைகளுக்கு நாங்கள் அறிவுறுத்தவும் இல்லை. மத்திய மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி இது விற்பனை செய்யப்பட்டுதான் வருகிறது. பெட்டிக்கடைகளில் பாராசிட்டமால் மாத்திரை விற்பனை செய்யப்படுவது தொடர்பாக அவ்வப்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது” என்றார்.
இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத பொது சுகாதாரத் துறை அதிகாரி கூறுகையில், “பாராசிட்டமால் பொதுவாகப் பலரால் பயன்படுத்தக்கூடிய மருந்து. பாராசிட்டமால் மட்டும் அல்ல; எந்த மருந்தாக இருந்தாலும் மருந்துச் சீட்டு இல்லாமல் வழங்கக்கூடாது. தற்போது இந்த மாத்திரையின் விற்பனை அதிகரித்துள்ளது. தேவையின்றி பலர் வாங்கி பயன்படுத்துவதால் தேவையுள்ள நோயாளிகளுக்கு மருந்து கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டுவிடக்கூடாது. இதனால்தான் மருந்துச் சீட்டைக் காண்பித்து மாத்திரையை வாங்கச் சொல்கிறோம்” என்றார்.