ஒருவர் பின் ஒருவராக காப்பாற்றச் சென்ற 6 பேர் நீரில் மூழ்கி பலி”✍️ அமராவதி ஆற்றில் நடந்த விபரீதம்! தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற 5 மாணவர்கள் உள்பட 6 பேர் பலி✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
“ஒருவர் பின் ஒருவராக காப்பாற்றச் சென்ற 6 பேர் நீரில் மூழ்கி பலி” : அமராவதி ஆற்றில் நடந்த விபரீதம்! தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற 5 மாணவர்கள் உள்பட 6 பேர் பலியாகினர்.
திருப்பூர் இடுவாய் பகுதியை சேர்ந்த 30 பேர் திண்டுக்கல் மாவட்டம் மாம்பாறை பகுதியில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கடா வெட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.
நிகழ்ச்சி முடிந்து மீண்டும் தாராபுரம் வழியாக திருப்பூர் புறப்பட்டு வரும் வழியில் தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஒருவர் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி உள்ளார். அவரை காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக 8 பேர் சென்று நீரில் மூழ்கி உள்ளனர். அருகில் இருந்த மற்றவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக விரைந்து சென்ற தாராபுரம் தீயணைப்புத் துறையினர் சரண், ஜீவா என்ற இரண்டு பேரை உயிருடன் மீட்டனர். பின்னர் நீரில் மூழ்கி உயிரிழந்த அமிர்தகிருஷ்ணன், சக்கரவர்மன், ஸ்ரீதர், ரஞ்சித், யுவன், மோகன் என்ற 4 கல்லூரி மாணவர்கள், 1 பள்ளி மாணவர் உள்பட 6 பேரின் உடல்களை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக தாராபுரம் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்