யாருக்கு வேலை செய்கிறோம்?
என் நண்பன் மிகுந்த அறிவாளி; ஆற்றல் மிக்கவன், பெரிய அளவில் லட்சியமும் கொண்டவன். அவனுடைய தந்தைக்கு தன் மகன் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்று ஆசை. நண்பனுக்கோ வெளிநாட்டுக் கனவுகள். நண்பன் படிப்பைச் சீரும் சிறப்புமாக முடித்தான். வேலை வாய்ப்புகள் வந்தன. நண்பன் வெளிநாட்டு வாய்ப்புக்கு முன்னுரிமை அளித்துப் பறந்து சென்றான். தந்தையின் கனவு நிறைவேறாமல் போனாலும் மகனின் கனவு நிறைவேறியது என்று தந்தை சந்தோஷப்பட்டார். நாட்கள் கழிந்தன. நண்பனை சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் தற்செயலாகச் சந்தித்தேன். எப்போதும் அவனிடம் இருக்கும் ஒரு பளிச் ஏனோ அன்று இல்லை.
“என்னடா ஆச்சு? எப்போது இந்தியா வந்தாய்? ஏன் சோர்ந்து போய் இருக்கிறாய்?” என்று கேட்டேன்.
அதற்கு அவன், “ஒரு வருடம் ஆகிறது. வெளிநாட்டுக்குச் சென்றவுடன் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இலக்கை அடைந்து விட்டோம் என்று தோன்றியது. ஆனால், நாட்கள் போகப்போக அந்த இயந்திர வாழ்க்கை சலிப்பு தட்டியது. அப்பா, அம்மா, அக்கா, நண்பர்கள், நாய்க் குட்டி யாரையும் பார்க்க முடியவில்லை.
இயந்திரங்கள் மற்றும் கட்டடங்கள் நிறைந்த காட்டைக் காண முடிந்தது. உறவுகளையும், மனிதர்களையும் காண முடியவில்லை. ஒரு வாரம் விடுமுறை கிடைத்தது. அவசர அவசரமாக வந்து பெண் பார்த்துத் திருமணம் செய்துகொண்டு ஒரு வாரத்தில் மீண்டும் பணிக்குத் திரும்பிவிட்டேன். அதன் பின் எந்த ஒரு நல்லது, கெட்டதுற்கும் ஊருக்கு வர முடியவில்லை. மனைவியும் சிறிது நாட்களில் அங்கு இருக்கப் பிடிக்காமல் இந்தியாவுக்கு வந்துவிட்டாள்.
“வெளிநாட்டு வேலை மற்றும் வாழ்க்கைதானேடா உன் லட்சியம்?” என்றேன்.
“லட்சியமாவது வெங்காயமாவது? எல்லாம் போன பிறகு தான் தெரியுது, அவ்வளவு கஷ்டப்பட்டு யாருக்காக உழைக்கிறோம்? ஏதோ ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்காக. நினைக்கும்போதே வெட்கமாக இருக்கிறது!”
“சரி, கவலைப்படாதே. இங்கு வந்துவிட்டாய், அல்லவா? உன் அப்பா பார்த்துக்கொள்வார்” என்று ஆறுதல் கூற முயற்சித்தேன்.
“அப்பாவுக்கு மாரடைப்பு வந்த பிறகுதான் வேலையையே தூக்கி எறிந்துவிட்டு வந்துவிட்டேன். இன்று ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறேன். ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறேன். அப்பா உடல் நிலையும் தேறி வருகிறது. எனக்காக இல்லாவிட்டாலும் அப்பாவுக்காக நிச்சயம் இந்தத் தேர்வில் வெற்றி பெறுவேன்” என்று அவன் சொன்னதைக் கேட்டு, சொன்ன அவனைவிட ஆறுதல் சொன்ன என் கண்கள் அதிகம் கலங்கின.
“நீ கண்டிப்பா ஜெயிக்கனும்டா. ஜெயிப்ப.”
நண்பனின் இந்த கதை எனக்குப் பல விஷயங்களை உணர்த்தியது. அதில் முக்கியமானது முதலில் வேலையைவிட வாழ்க்கை மிக முக்கியம். இரண்டாவது நம் முன் நூறு வேலை வாய்ப்புகள் இருந்தாலும் அதனால், மற்றவர்களுக்குப் பயனில்லை என்றால் எத்தனை லட்சம் சம்பாதித்தாலும் அந்த வேலை வீணே. அதாவது யாருக்கு உழைக்கிறோம், நம் உழைப்பால் யாருக்குப் பலன் என்று உணர்ந்து உழைப்பது மிக அவசியம்!
நன்றி…??
✨வாழ்க வளமுடன், நலமுடன்✨