சென்னை ஆவடியில் ,நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் கவரிங் நகை திருடி தப்பியோடிய வாலிபர், வாடகை வீடு தேடிவந்தபோது சிக்கினார்✍️தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் கவரிங் நகை திருடி தப்பியோடிய வாலிபர் வாடகை வீடு தேடிவந்தபோது சிக்கினார்: தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு
ஆவடி: நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் கவரிங் செயின் பறித்து தப்பிய வாலிபர், வாடகை வீடு தேடிவந்தபோது சிக்கினார். அவரை பொதுமக்கள் அடித்துஉதைத்து போலீசில் ஒப்படைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அம்பத்தூர் மேனாம்பேடு இந்திரா நகரை சேர்ந்தவர் ரவி. இவர் மின்வாரியத்தில் போர்மேனாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி இந்துமதி (52). இவர் கடந்த 27ம்தேதி அதிகாலையில் மேனாம்பேடு சர்வீஸ் சாலையில் நடைபயிற்சி சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபர், இந்துமதி அணிந்திருந்த 10 சவரன் செயினை பறித்து தப்பினார். அது கவரிங் செயின் என்பதால் இந்துமதி நடந்த சம்பவம் பற்றி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை. இந்த நிலையில், தனது வீட்டின் அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்க வந்த நபர், தன்னிடம் செயின் பறித்து தப்பியவர் என்பதை பார்த்துவிட்ட இந்துமதி கூச்சலிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அப்பகுதியினர் வந்தபோது நடந்த சம்பவத்தை அவர்களிடம் தெரிவித்தார்.
இதையடுத்து அந்த நபரை பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்து சரமாரி அடித்து உதைத்தனர். பின்னர் அந்த நபரை அம்பத்தூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் விசாரித்தபோது பிடிபட்ட நபர், அம்பத்தூர் கள்ளிக்குப்பம் ஓம்சக்தி நகரை சேர்ந்த செல்வகுமார் (33) என்று தெரியவந்தது. சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக வேலை பறிபோனதால் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவித்துள்ளார். வீட்டு வாடகை பணம் கட்டுவதற்காக வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார் என்று தெரியவந்தது. இதையடுத்து செல்வகுமாரை போலீசார் கைது செய்தனர். இருப்பினும் அவர் சொல்வது உண்மைதானா, வேறு இடத்தில் வழிப்பறி செய்துள்ளார் என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.