இனிமே இப்படி பேசக் கூடாது: கிறிஸ்துவ பாதரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு நிபந்தனை ஜாமீன்!✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்
இனிமே இப்படி பேசக் கூடாது: ஜார்ஜ் பொன்னையாவுக்கு நிபந்தனை ஜாமீன்!
ஹைலைட்ஸ்:
வயது முதிர்ந்தவராகவும், இதய நோயாளியாகவும் இருப்பதால் நிபந்தனை ஜாமீன்
மதம், அரசியல், பிரச்சனைகளை தூண்டும் வகையில் பேசக்கூடாது
கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கிறிஸ்தவ இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து நடத்திய சிறுபான்மைச் சமூகத்தின் உரிமை மீட்புப் போராட்டம் அண்மையில் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஜனநாயக கிறிஸ்தவ பேரவை அமைப்பின் ஆலோசகரும், பனவிளை தேவாலய பங்குதந்தையுமான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளைப் பேசியதாக தெரிகிறது.
இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து, தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வீடியோ வெளியிட்டார். இதனிடையே, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின்பேரில் மத உணர்வுகளைப் புண்படுத்துதல், அவதூறு பரப்புதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அவரை கைது செய்தனர். அவர் பேசுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்டத்திலும் ஈடுபட்டன.
இந்த நிலையில், சர்ச்சைக்குள்ளான வகையில் பேசியதால் கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. வயது முதிர்ந்தவராகவும், இதய நோயாளியாகவும் இருப்பதால் நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. வரும் காலங்களில் மதம், அரசியல், பிரச்சனைகளை தூண்டும் வகையில் பேசக்கூடாது எனவும் அப்போது அவருக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.