சிறார் ஆபாச வீடியோ தொடரும் போலீசாரின் அதிரடி?
சிறார் ஆபாச வீடியோ : தொடரும் போலீசாரின் அதிரடி.
திருச்சி : சிறார் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக நேற்று திருச்சியில் கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்ட நிலையில், ஐபி முகவரிகளை கொண்டு மேலும் 30 பேரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
சிறார் ஆபாச வீடியோவை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்ததாக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவரை போலீசார் நேற்று (டிச.,12) கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கிறிஸ்டோபர் குழுவை சேர்ந்த 30 பேரிடம் திருச்சி போலீசார் இன்று (டிச.,13) விசாரணை நடத்த உள்ளனர். ஐதராபாத், உன்னாவ் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக திருச்சியில் முதல் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திருச்சியை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் ஆபாச வீடியோ பதிவிட்ட மற்றும் பகிர்ந்த பலரிடம் விசாரணையை துவக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஐபி முகவரிகளை கொண்டு ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஐபி முகவரிகளின் அடிப்படையில் ஆபாச வீடியோகளை பதிவிட்டவர்கள் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில், கைது நடவடிக்கை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.