பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற
தலைவர் அஸ்லம் பாஷா அவர்கள் மீது
6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதை
உடனடியாக வாபஸ் பெற வேண்டும்
காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு கோரிக்கை.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஏ.ஜெய்னுல் ஆலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது
இந்திய சீன எல்லையில் இருநாட்டு ராணுவத்தினருக்கு இடையே நடைபெற்ற மோதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பழனி உள்பட இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்த செய்தி இந்திய மக்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
இந்த நிகழ்வு சம்பந்தமாக நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பதை கண்டித்தும். சீனாவிற்கு உரிய பதிலடியை கொடுக்காமல் இந்திய இறையாண்மையை காக்க தவறியதை கண்டித்தும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு தலைவர் டாக்டர் ஜெ. அஸ்லம் பாஷா அவர்கள் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் வாணியம்பாடியில் இருந்து நடைபயணமாக டெல்லிக்குச் சென்று பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
அமைதி வழியிலும் அறவழியிலும் நாட்டு மக்களின் உணர்வுகளை பிரதமருக்கு தெரிவிப்பதற்காக ஜுன்18 ஆம் தேதி நடந்த இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு தலைவர் டாக்டர் ஜெ. அஸ்லம் பாஷா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் மீது 6 பிரிவுகளில் வாணியம்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
இந்திய நாட்டின் எல்லையில் ஊடுருவி இந்திய மண்ணை ஆக்கிரமிப்பு செய்ய நினைக்கின்ற சீன அதிபரோடு மகாபலிபுரத்தில் சுற்றுலா சென்ற பிரதமர் மோடியின் செயல்களாலும். மேக்கிங் இந்தியா என்று சொல்லி ரூபாய் 3000 கோடி மதிப்பிலான வல்லபாய் பட்டேல் சிலையை குஜராத்தில் நிறுவ சீன நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து செயல்பட்டதும். ரூபாய் 1400 கோடி அளவிற்கு ஜூன் 5ஆம் தேதி சீன நிறுவனத்தோடு வர்த்தஒப்பந்தம் போட்டுள்ள இந்திய அரசின் இத்தகைய பலவீனமான நடவடிக்கைகளே இந்திய ராணுவத்தின் மீது சீனா தாக்குதல் நடத்துவதற்கு தைரியம் வந்ததற்கான காரணமாகும்.
இந்த உண்மைகளை மூடி மறைக்க முயற்சி செய்யும் பிரதமர் மோடியின் முகத்திரையை கிழிக்க பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட புறப்பட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் டாக்டர் ஜெ.அஸ்லம் பாஷா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்து 6 பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருக்கின்ற காவல்துறையையும் மத்திய அரசின் ஊதுகுழலாக செயல்படும் தமிழக அரசையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.
உடனடியாக தலைவர் அஸ்லம் பாஷா அவர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் வெடிக்கும் என்று தமிழக அரசை எச்சரிக்கிறோம்.