இலங்கை தேர்தலில் வெற்றி.. மீண்டும் பிரதமராகிறார் ராஜபக்சே..!?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
✍?⚡இலங்கை தேர்தலில் வெற்றி.. மீண்டும் பிரதமராகிறார் ராஜபக்சே..!
இலங்கையின் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால் ராஜபக்சே மீண்டும் பிரதமராவது உறுதியாகி உள்ளது.
இலங்கையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில் 71 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
இதில் ஆரம்பத்திலிருந்தே அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணியில் இருந்தது.
நேற்று இரவு 10 மணி வரையிலான தேர்தல் முடிவுகளின் நிலவரப்படி, இந்தக் கட்சி 41 லட்சத்து 5 ஆயிரத்து 602 வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கிறது.
சில இடங்களில் கடும் நெருக்கடியை கொடுத்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அடுத்தடுத்து சுற்றுகளில் பின்னுக்கு தள்ளப்பட்டு மிகப் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கட்சி 67 புள்ளி 3 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது.
அதேபோல் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 16 புள்ளி 99 விழுக்காடு வாக்குகளும், ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி 2.34 விழுக்காடு வாக்குகளும் பெற்றன.
தமிழர்களை குறிவைத்து தேர்தலில் களம் கண்ட சம்பந்தனின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சிக்கு 2.28 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன.
தமிழ் மக்கள்அதிகமாக வசிக்கும் வடக்கு பகுதியில் யாழ்பாணம் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, தமிழ்தேசியக் கூட்டமைப்பை பின்னுக்கு தள்ளி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
ராஜபக்சேவின் கட்சியுடன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த ராஜபக்ஷே கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பசில் ராஜபக்ஷே, தங்கள் கட்சி 3ல் 2 பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கிடையே, இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்த தகவலை இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.