பதஞ்சலிக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்? கொரோனா மருந்து குறித்த விளம்பரத்தை நிறுத்துங்கள்?முழுவிவரம் -விண்மீன் நியூஸ்
‘கொரோனா மருந்து குறித்த விளம்பரத்தை நிறுத்துங்கள்’: பதஞ்சலிக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனாவுக்கு கண்டுபிடித்துள்ளதாக கூறும் மருந்தை விளம்பரப்படுத்துவதை நிறுத்துமாறு மத்திய அரசு கூறியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. நாட்டிலேயே மும்பை, டெல்லி, சென்னை போன்ற முக்கிய நகரங்கள் இந்த நோய்த் தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுக்க கொரோனாவிற்கு 4,40,215 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் 91,92,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உலக அளவில் இந்த நோய்த் தொற்றுக்கு 474,445 இறந்துள்ளனர்.
மேலும், நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கைக் கூடிக்கொண்டே செல்கிறது. இதில் கவலை அளிக்கும் தகவலாக இந்த நோய்க்கு எதிராக நின்று களத்தில் போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்களும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே இந்தத் தொற்று நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதற்காக பல்வேறு மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை கொரோனாவிற்கு நேரடியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், பாபா ராம்தேவுடன் தொடர்புடைய ‘பதஞ்சலி’ நிறுவனம் கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக கூறி ‘கொரோனில் மற்றும் ஸ்வாசரி’ என்ற பெயரில் சந்தையில் விற்பனையைத் தொடங்கி இருக்கிறது. மேலும் இந்த மருந்து ஏழு நாட்களுக்குள் கொரோனாவை 100% குணப்படுத்திவிடும் என்றும் விளம்பரப்படுத்த தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக பாபா ராம்தேவ், “நாங்கள் இன்று கொரோனா மருந்தை அறிமுகப்படுத்துகிறோம். இவற்றில் இரண்டு சோதனைகளை நாங்கள் நடத்தினோம். இந்த ஆய்வு டெல்லி, அகமதாபாத் எனப் பல நகரங்களில் நடந்தது. மொத்தம் 280 நோயாளிகள் சோதிக்கப்பட்டதில் 100 சதவீதம் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸையும் அதன் சிக்கல்களையும் இதனால் கட்டுப்படுத்த முடிந்தது” என்று கூறினார்.
இந்நிலையில் மத்திய அரசின் ‘ஆயுஷ்’ இது தொடர்பாக ஒரு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், “பதஞ்சலி ஆயுர்வேத லிமிடெட் வெளியிட்டுள்ள கொரோனா ஆயுர்வேத மருந்துகள் பற்றிய செய்திகளை மத்திய அமைச்சகம் அறிந்திருக்கிறது. அந்நிறுவனம் மருந்துகளின் விவரங்களை வழங்கவும், அதனை வெளியிடுவதையும் விளம்பரப்படுத்துவதையும் நிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா மருந்து சிகிச்சை குறித்தான முறையாக அதன் கூறுகள் ஆராயப்படும் வரை இந்த மருந்தினை நிறுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளது.