ஊரடங்கு மே3 வரை எதற்கெல்லாம் தடை தொடரும் ?முழு விபரம் – விண்மீன் நியூஸ்
லாக்டவுனில் சலுகை ஓகே.. மே 3 வரை எதற்கெல்லாம் தடை தொடரும் தெரியுமா? இதோ லிஸ்ட்.
டெல்லி: நாடு முழுக்க மே 3-ஆம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்படுவதாக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைக்காட்சி உரையின்போது அறிவித்தார்.
அதேநேரம் வைரஸ் பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் லாக்டவுன் விதிகளில் தளர்வு கொண்டுவரப்படும். அது தொடர்பான அறிவிப்பு புதன்கிழமை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
Lockdown Relaxation wont apply for these sectors including public transports
ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு இவை அமலுக்கு வரும் என்றும் மோடி கூறியிருந்தார். அதன்படி இன்று காலை லாக்டவுன் நடைமுறையில் பல சலுகைகள் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், எவை எவைக்கு அனுமதி வழங்கப்படுகிறது. எவற்றுக்கெல்லாம் அனுமதி மறுக்கப்படுகிறது என்பது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாட்ஸ்பாட் என்று அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகள் தவிர்த்து, பிற பகுதிகளுக்கு இவை பொருந்தும். அதேநேரம் தடை செய்யப்பட்ட சேவைகள் என்பது அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தக்கூடியது. எந்தெந்த சேவைகளுக்கு ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு மே 30ஆம் தேதி வரை இப்போதுள்ள தடை தொடரும் என்று பார்க்கலாம் வாருங்கள்.
நொறுங்கும் லாக்டவுன்..
அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான இயக்கம் தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட நிலையிலேயே இருக்கும். பாதுகாப்பு காரணங்கள் தவிர வேறு எதற்காகவும் விமான சேவை பயன்படுத்தப்பட மாட்டாது. ரயில்கள், பஸ்கள், மெட்ரோ ரயில் சேவைகள் ஆகியவையும் இப்போது போலவே மே 3-ஆம் தேதி வரை இயங்காது. பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டும்தான், இது போன்ற சேவைகள் தேவைப்படும் இடங்களில் இயக்கப்படும்.
மாவட்டங்கள் இடையே மற்றும் மாநிலங்கள் இடையேயான தனிநபர் பயணங்கள் தடைசெய்யப்பட்டது தொடரும். மருத்துவ காரணம் அல்லது ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட சில காரணங்களின் அடிப்படையில் அனுமதி பெற்றவர்களுக்கு மட்டும் தான் இது போல பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும்.
அனைத்து வகையான கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். இந்த வழிகாட்டு நெறிமுறையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு சில குறிப்பிட்ட தொழில் நடவடிக்கைகளை தவிர மற்ற அனைத்து தொழில் நடவடிக்கைகள் மற்றும் வணிக நடவடிக்கைகள் தொடர்ந்து முடக்கப்பட்டு இருக்கும்.
சுற்றுலாத்துறை நடவடிக்கைகளுக்கும் தடை தொடர்கிறது. ஆட்டோ ரிக்ஷாக்கள், சைக்கிள் ரிக்ஷாக்கள், டாக்ஸிகள், டாக்ஸி சேவைகளை வழங்க கூடிய நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு தடை தொடர்கிறது. அனைத்து வகை சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், விளையாட்டு காம்ப்ளக்ஸ், நீச்சல் குளம், பொழுதுபோக்குப் பூங்கா, பார், ஆடிட்டோரியம் உள்ளிட்ட மக்கள் கூட கூடிய இடங்களுக்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது.
சமூகம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சாரம், மத விழாக்கள் ஆகிய அனைத்துக்கும் விதிக்கப்பட்டிருந்த தடை மே 3ஆம் தேதி வரை தொடர்கிறது. அனைத்து மத வழிபாட்டு தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். மத ஒன்றுகூடல்கள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். இறுதி சடங்கு போன்ற நிகழ்வுகளில் அதிகபட்சம், 20 பேருக்கு மேல் கலந்து கொள்ளக் கூடாது என்பது விதிமுறை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.