வண்டலூர் உயிரியியல் பூங்காவில் ,குரங்குகளை திருடி ரூ. 4 லட்சத்துக்கு விற்ற ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட 4 பேர் கைது✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்
குரங்குகளை திருடி ரூ. 4 லட்சத்துக்கு விற்ற ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட 4 பேர் கைது*
கூடுவாஞ்சேரி: வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில், சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இதனை காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவை சேர்ந்த அரிய வகையான 2 அணில் குரங்குகளை வெளிநாட்டுக்கு கடத்தும்போது சென்னை ஏர்போர்ட்டில் மீட்கப்பட்டு வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த 2 குரங்குகளும் கடந்த 8ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்காவில் மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.
இதுகுறித்து பூங்கா வனச்சரகர் வாசு ஓட்டேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவந்தனர். மேலும், வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். இதில், பூங்காவில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர் சிங்கப்பெருமாள் கோயில் அடுத்த பாரேரி, 2வது குறுக்கு தெருவை சேர்ந்த சக்திவேல் (34) என்பவரை பிடித்து போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சக்திவேல் என்பவரின் உதவியுடன், கோவிந்தாபுரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன் என்ற ஜான் (21) என்பவர் கடந்த 7ம் தேதி மாலை பார்வையாளர் போல் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்து ஆம்புலன்ஸ் டிரைவர் சக்திவேல் என்பவரை சந்தித்து பார்வையாளர்கள் அனைவரும் வெளியே சென்ற பிறகு இரவானதும் விலை உயர்ந்த வெளிநாட்டு குரங்குகளான 2 அணில் குரங்குகள் இருந்த கூண்டின் இரும்பு கம்பிகளை நொறுக்கி உள்ளே புகுந்து 2 குரங்குகளையும் திருடி ஜானகிராமன் எடுத்து வந்த கைப்பையில் போட்டு பூங்காவின் சுற்று சுவர் வழியாக ஏறி குதித்து சென்றுள்ளார்.
பின்னர், அந்த குரங்குகளையும் காரணைப்புதுச்சேரி, கம்சளா தெருவை சேர்ந்த லோகநாதன் என்ற சூர்யா (29) என்பவரிடம் ஜானகிராமன் கொடுத்துள்ளார். இதனையடுத்து, ஜானகிராமனும் சூர்யாவும் சேர்ந்து சென்னை கொளத்தூர், திருப்பதி நகர், வள்ளலார் தெருவை சேர்ந்த வினோத் (29) என்பவரிடம் ரூ. 4 லட்சத்திற்கு 2 குரங்குகளையும் விற்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து 4 பேரையும் ஓட்டேரி போலீசார் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி அங்குள்ள சிறையில் அடைத்தனர். மேலும், 2 ஆண் அணில் குரங்குகளை மீட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள குரங்குகளின் கூண்டில் அடைத்தனர். மேலும், அவைகளுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பூங்கா நிர்வாகம் செய்து வருகிறது.