சிறை கைதிகளால் தயாரிக்கப்படும் 2டன் பிரெட்டுகள் சேலம் மத்திய சிறையில் ஆச்சரியம்
சேலம் மத்திய சிறை கைதிகளால் தயாரிக்கப்படும் பிரெட்டுகள்
சேலம் மத்திய சிறையில் தயாரிக்கப்படும் பிரெட்டுகளிலிருந்து, 2 டன் பிரெட்டுகளை சேலம் அரசு மருத்துவமனைக்கு மாதந்தோறும் வழங்க சிறைத்துறை நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.
சிறை கைதிகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தித்தரும் முயற்சியாக சேலம் மத்திய சிறையில் பிரட் தயாரிக்கும் சிறிய அளவிலான தொழிற்சாலை நிறுவப்பட்டு, அங்கு கைதிகள் தயாரிக்கும் பிரட்டுகள், சிறைக்கு வெளியில் உள்ள கடையில் விற்கப்பட்டுவருகிறது.
அந்த வகையில்,பன் ஐந்து ரூபாய்க்கும், பிரட் வகைகள் 25 ரூபாய்க்கும், தேங்காய் பன் 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே, சிறையில் அதிக அளவில் பிரெட்டுகள் உற்பத்தி செய்யப்படுவதால், பிரெட் விற்பனையை அதிகப்படுத்த முடிவெடுத்துள்ள சிறைத் துறை நிர்வாகம், இனி மாதந்தோறும் இரண்டு டன் பிரெட்டுகளை சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு வழங்க முடிவுசெய்துள்ளது.
அதன்படி, 200 கிராம் பிரெட்டின் விலை 12 ரூபாய் 50 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாதந்தோறும் கிடைக்கவுள்ள ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருவாயிலிருந்து குறிப்பிட்ட ஒரு தொகையை, பிரெட் தயாரிக்கும் கைதிகளுக்கு வழங்கவும் சிறை நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.