கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முற்றுகை
கோவில்பட்டி அருகேயுள்ள இடைசெவல் கிராம மக்கள், சி.பி.ஐ., நகர தாலுகா செயலாளர் பாபு தலைமையில், மாவட்ட செயலாளர் சேதுராமலிங்கம் முன்னிலையில் கோவில்பட்டி தாலுகா ஆபிஸ் முன் திரண்டனர். பின்னர் விவசாய பயன்பாட்டிற்கு காடுகளுக்கு சென்று வர வண்டி பாதை கோரி கோசமிட்டனர். பின்னர் அவர்கள் தாலுகா ஆபிசில் தலைமையிடத்து துணை தாசில்தார் ராமகிருஷ்ணனிடம் வழங்கிய மனுவில்,
கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கார்த்திகைப்பட்டி கிராமம் வரை இணைப்பு சாலை பணி நடந்து வருகிறது.
இதில் குருமலைக்கு செல்லும் கால்வரத்து ஓடையை அடைத்து மறித்துள்ளனர். சாலை பணியில் இருபக்கங்களிலும் சுமார் 10 அடி ஆழம் 15 அடி அகலம் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது.
இடைசெவல் கிராம விவசாயிகள் கடந்த காலங்களில் அந்த ஓடையின் ஒருபக்க கரையின் வழியாக சென்று, மறுபக்கம் கரையின் வழியாக இறங்கி ஏறி காடுகளுக்கு சென்று விவசாய பணிகளை செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது சாலை வேலை நடந்து வருவதை காரணமாக வைத்து அந்த பாதையின் வழியாக விவசாயிகளோ வாகனங்களோ செல்ல கூடாது என்று ஓடையின் இருபக்கம் உள்ள நில உரிமையாளர்கள் தடுத்து வருகின்றனர். எனவே தாங்கள் இப்பிரச்சனையில் தலையிட்டு வழக்கம் போல் விவசாயிகள் பழைய வண்டி பாதையை பயன்படுத்தவும், தோண்டப்பட்ட பள்ளத்தை நிரப்பவும் மற்றும் தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் அளித்தமனுவில் தெரிவித்திருந்தனர்.