கோவில்பட்டி கண்மாய் பகுதியில் குப்பைகளை கொட்ட வந்தவர்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
கோவில்பட்டி அருகே கண்மாய் பகுதியில் கழிவு குப்பைகளை கொட்ட வந்த டிராக்டர்களை சிறைபிடித்து மக்கள் போராட்டம்
கோவில்பட்டி அருகேயுள்ள இனாம்மணியாச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதி அத்தைக்கொண்டான். இங்குள்ள கண்மாய் இப்பகுதியின் நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னர் புலித்தேவர் மக்கள் நல இயக்கம் சார்பில் அத்தைக்கொண்டான் கண்மாயில் சீரமைப்பு பணிகள் மேற்க்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் இந்த கண்மாயை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் கண்மாய் பகுதியில் கொட்டி வந்ததாக தெரிகிறது. இதே போன்று சில தனியார் நிறுவனங்களும் அவ்வப்போது இப்பகுதியில் குப்பைகளை கொட்டி வந்ததால், கண்மாய் முழுவதும் குப்பைகள் அதிகளவில் காணப்படுவது மட்டுமின்றி, அதில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தினால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். மேலும் அருகில் பள்ளி இருப்பதால் பள்ளிக்குழந்தைகளும் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தொடர்ந்து குப்பைக்கொட்டி வந்த நிலையில், இன்று வழக்கம் போல குப்பைகளை கொட்ட வந்த 2 டிராக்டர்களை மாமன்னர் புலித்தேவர் மக்கள் நல இயக்க தலைவர் செல்வம் என்ற செல்லத்துரை தலைமையில், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி மாரிமுத்துராமலிங்கம் மற்றும் அப்பகுதி பொது மக்கள் இளைஞர்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் குப்பைகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி டொங்கு உள்ளிட்ட தொற்று நோய்களும் ஏற்பட்டுவருவதாக குற்றம்சாட்டினர். இதையெடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். குப்பைகளை கொட்டுவது நிறுத்தப்படுவது மட்டுமின்றி, ஏற்கனவே கொட்டப்பட்டுள்ள குப்பைகள் வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர்.