சோழவந்தான் அருகே இறுதி ஊர்வலத்தில் லாரி புகுந்து விபத்து ஏற்படுத்திய சம்பவத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழப்பு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
இறுதி ஊர்வலத்திற்குள் லாரி புகுந்து 2 பெண்கள் உயிரிழப்பு: சோழவந்தான் அருகே பரிதாப சம்பவம்*
சோழவந்தான் அருகே இறுதி ஊர்வலத்தில் லாரி புகுந்து விபத்து ஏற்படுத்திய சம்பவத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரை சோழவந்தான் அருகே திருவேடம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னையா என்பவர் நேற்று காலை காலமானார்.இவருக்கான இறுதிச் சடங்கு இன்று பகலில் நடந்தது.
முன்னதாக நீர் மாலை எடுக்கும் நிகழச்சிக்காக வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்க, பொன்னையா குடும்பத்தினர், உறவினர்கள் சென்றனர். பெண்கள் ரோட்டின் ஓரமாக நடந்து சென்றனர்.
அப்போது, மதுரையிலிருந்து சோழவந்தான் நோக்கி அதிகவேகமாக சென்ற லாரி பெண்கள் கூட்டத்திற்குள் புகுந்தது.
சம்பவ இடத்திலேயே திருவேடகத்தைச் சேர்ந்த பொன்மலர் (35) என்பவர் இறந்தார். உயிருக்குப் போராடிய திருப்பரங்குன்றம் ராணியை மீட்டு, சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
வழியில் அவரும் உயிரிழந்தார். மேலும் காயமடைந்த லட்சுமி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மற்றொரு பெண்ணும் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களின் கூட்டத்திற்குள் லாரி புகுந்து 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சோழவந்தான் போலீசார் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை கைது செய்தனர்.