காரில் வந்து வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மர்ம கும்பல், பொதுமக்கள் வந்ததால் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிய கும்பல்✍️ஜோலார்பேட்டை பரபரப்பு✍️முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
ஜோலார்பேட்டை அருகே காரில் வந்து வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மர்ம கும்பல், பொதுமக்கள் வந்ததால் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
பூட்டை உடைத்து திருட்டு
ஜோலார்பேட்டையை அடுத்த அசோக் நகரை சேர்ந்தவர் லட்சுமி (வயது 75). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் மர்ம ஆசாமிகள் யாரோ வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை திருடி உள்ளனர்.
அப்போது ஏற்பட்ட சத்தத்தை கேட்டு லட்சுமி கூச்சலிட்டார். உடனே மர்ம நபர்கள் பணத்துடன் காரில் தப்பிச்சென்றுவிட்டனர்.
தப்பி ஓட்டம்
அதன்பிறகு அருகே உள்ள பார்த்தசாரதி தெருவில் வசித்து வரும் சின்னக்குட்டி (67) என்பது வீட்டின் கதவை உடைத்துள்ளனர். அப்போது சத்தம் கேட்டு அருகில் உள்ள வீட்டில் இருந்தவர்கள் இதை பார்த்து கூச்சல் போட்டுள்ளனர்.
பின்னர் மர்ம நபர்களை பொதுமக்கள் பிடிக்க முயன்றபோது வேறு இடங்களில் திருடிய விலை உயர்ந்த துணிகளுடன், காரை அங்கேயே விட்டுவிட்டு, தப்பி ஓடிவிட்டனர்.
கார் பறிமுதல்
இதுகுறித்து பொதுமக்கள் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விசாரணை நடத்தினர்.
பின்னர் மர்ம நபர்கள் விட்டுச்சென்ற காரை கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் கர்நாடக மாநில பதிவு கொண்டதாக இருந்ததால் தனிப்படையினர் கர்நாடகா மாநிலத்துக்கு விரைந்துள்ளனர்.